600 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அவ்வழக்கில் மேலும் இருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கணேசன், சாமிநாதன் ஆகியோர், நிதி நிறுவனம், அடகுக் கடை, பால் பண்ணை என பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். சொந்தமாக ஹெலிகாப்டரை வைத்திருப்பதால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட இவர்கள், தங்கள் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால், அதனை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி 600 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பலரும் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து இருவரும் தலைமறைவான நிலையில், நிதி நிறுவனத்தின் மேலாளர்களில் ஒருவரை கைது செய்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான கணேசனின் மனைவி அகிலா, நிறுவனத்தின் மற்றொரு மேலாளரான வெங்கடேசன் ஆகியோரை காவல்துறையினர் கும்பகோணத்தில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள தனிப்படை, ஹெலிகாப்டர் சகோதரர்களைத் தேடி வருகின்றனர்.