மதுரை சித்திரை திருவிழா: வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி

மதுரை சித்திரை திருவிழா: வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி

மதுரை சித்திரை திருவிழா: வைகை ஆற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி

மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம், தேர்திருவிழா ஆகியவை முடிவுற்ற நிலையில், பக்கதர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரமாண்டமாக நடைபெற்ற கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அழகர் ஆற்றில் இறங்கியபோது, கட்டுப்பாடுகளை மீறி முண்டியடித்து பெரும்பாலானோர் வைகை ஆற்றில் இறங்கினர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றில் இறங்கக் கூடாது என்ற மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையை மீறி பலர் ஆற்றில் இறங்கியதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி காணாமல் போன உறவினர்கள் குறித்து தெரிவிக்கவும், காயமடைந்தோர், உயிரிழந்தோர் குறித்த விவரங்களை கேட்டறியவும் 94980 42434 என்ற உதவி எண்ணை மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com