18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போதுள்ள அரசுக்கு எதிராக செயல்பட்டதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருந்ததை, எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குடன் தமிழக சட்டப்பேரவையில் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு, திமுக எம்எல்ஏக்கள் குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்த வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தரப்பு மற்றும் டிடிவி தினகரன் தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளையும் வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.