18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: 3-வது நீதிபதி விசாரணை இன்று தொடக்கம்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, மூன்றாவது நீதிபதி முன் இன்று முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை கடந்த ஜூன் 14-ஆம் தேதி அளித்தனர். இதனால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதையடுத்து மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் முன்பு கடந்த 4-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூலை 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை வழக்கை விசாரிப்பதாக நீதிபதி கூறியதை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பு மற்றும் முதல்வர், பேரவைச் செயலாளர் தரப்பு வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன் இன்று காலை 10.30 மணிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இரண்டரை நாட்கள் தங்கள் வாதங்களை முன்வைக்க தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் ஏற்கனவே நீதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன்பின்னர் பேரவை செயலாளர், முதல்வர் தரப்பில் வாதங்கள் தொடங்க வாய்ப்புள்ளது.