பாலியல் தொல்லையால் கரூர் அருகே 12-ம் வகுப்பு பயின்று வரும் 17 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டதாக புகார் எழுந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுவரும் 17 வயது பள்ளி மாணவி நேற்று மாலை பள்ளி முடித்து வீடு திரும்பியிருக்கிறார். தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் வீட்டிலிருந்த சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த மாணவி இறப்பதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசிப்பெண் நானாகத்தான் இருக்கவேண்டும் என்று கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியின் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தற்கொலைக்கான காரணம்குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர். கோவை மாணவியின் சோகம் மறைவதற்குள் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)