10 கோடி லஞ்சம்: போக்குவரத்து அலுவலர் உட்பட 17 பேர் மீது வழக்கு
மதுரையில் போலி கல்விச் சான்றிதழ்களைப் பெற்று ரூ.10 கோடி அளவிற்கு பண மோசடி செய்ததாக, வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த குமரகுரு என்பவர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் 2015-16ஆம் ஆண்டுகளில் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோசடி நடத்திருப்பது தெரியவந்துள்ளது. போலி சான்றிதழ்கள் மூலம் கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தை வழங்குவதற்கு, 6,777 பேரிடம் ரூ.10 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, அப்போது மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக இருந்த கல்யாண் குமார், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட 17 பேர் மீது, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வரும் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.