சொகுசு பங்களாவில் குடிபோதையில் அட்டகாசம் செய்த 150 மாணவர்கள் கைது
பொள்ளாச்சி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த சொகுசு விடுதியில் அட்டகாசம் செய்த 150க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அண்ணாநகர் பகுதியில் உள்ள கணேஷ் என்பவரது தோட்டத்தில், அக்ரி நெஸ்ட் என்ற பெயரில் அனுமதி இல்லாமல் சொகுசு விடுதி செயல்பட்டு வந்தது. நேற்றிரவு 150க்கும் மேற்பட்ட கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் மது மற்றும் கஞ்சா மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் உபயோகித்து இரவு முழுவதும் ரகளையில் ஈடுபட்டதாக போலீசாருக்கு அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் சாதாரண உடையில் நடத்திய அதிரடி ஆய்வில் அனுமதி இல்லாத அக்ரிநெஸ்ட் ரெசார்டில் 150க்கும் மேற்பட்டவர்கள் போதை வஸ்துக்களை பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து ஆனைமலை போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விடுதி உரிமையாளர் கணேஷ் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் கோவையில் உள்ள வெவ்வேறு கல்லூரியில் படிக்கும் வசதியான மாணவர்கள் என்பதும் பிறந்தநாள் விழாவை கொண்டாட இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு அனைவரும் ஒருசேர இங்கு அழைத்து இரவு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும் இவர்களது சொகுசு கார்கள் மற்றும் விலை உயர்ந்த இருச்சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விவசாயத் தோட்டத்தில் இதுபோல அனுமதியின்றி சொகுசு விடுதிகளில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சம்பவங்களுக்கு அனுமதி அளித்தது அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.