மரங்களுக்கு மறுவாழ்வு : இப்படியும் செய்யலாமே..!
மதுரையில் 15 மரங்கள் உயிருடன் வேறு இடத்தில் மறு நடவு செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது, ஆங்கிலேயர் கட்டிய கல் கட்டடத்தில் ஏறத்தாள 25க்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகிறது. மீதமுள்ள துறைகள் வாடகை கட்டடத்தில் வெளி இடங்களில் இயங்கி வருகின்றன. வாடகை கட்டடத்தில் இயங்கும் அலுவலங்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஆட்சியர் வளாகத்திலேயே உள்ள இடத்தில் புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இடையூறாக மரங்கள் இருப்பதால் அதனை அகற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் வழக்கம்போல மரங்களை வெட்டமால் ஒரு புதிய முறை அங்கு கையாளப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அங்கு பொறுப்பிலிருந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இந்த புதிய முறையை மேற்கொள்ளும்படி விருப்பம் தெரிவித்துள்ளார்.
மரங்களின் மகத்துவத்தை உணர்த்தும் வகையில், அங்கிருந்த 15 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. மரங்கள் வெட்டப்படமால், அதற்கு மாறாக மறுநடவு செய்யப்பட்டுள்ளன. விவேக் நர்சரி கார்டன் உதவியுடன் மரங்கள் மறு நடவு செய்யும் பணிகள் 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதன்மூலம் 13 வேம்பு, 1 இலஞ்சி, 1 புங்கை மரம் என மொத்தமாக 15 மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
மறுநடவு செய்யப்பட்ட முறை :
முதலில் மரங்களை மறு நடவு செய்ய வேண்டிய இடங்களில் 6க்கு 6 என்கிற அடி கணக்கில் குழிகளை தோண்டியுள்ளனர். குழிக்குள் உள்ள வெப்பத்தை வெளியேற்ற தேங்காய் நார், செம்மண், இயற்கை உரங்களை போட்டு தண்ணீர் ஊற்றியுள்ளனர். பின்னர் மறுநடவு செய்ய வேண்டிய மரங்களின் கிளைகளை வெட்டி மரத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வண்ணம் இயற்கை மருந்துகள் தெளித்துள்ளனர். மரத்தின் வேரோடு குழிவெட்டி மரத்தினை இயந்திரங்களின் உதவியோடு, ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்ட குழியில் மறு நடவு செய்துள்ளனர்.
இப்படியாக மறு நடவு செய்யப்படும் மரங்கள் 1 மாதத்தில் இருந்து 4 மாதத்திற்குள் மீண்டும் துளிர் விட்டு வளர தொடங்கும். ஒரு மரக்கன்றிணை வைத்து வளர்த்தால், அது மரமாகி பலன்தர 15 வருடங்கள் ஆகிவிடும். ஆனால் வெட்டப்படும் மரங்களை மறுநடவு செய்வது என்பது உடனுக்குடன் பலன் தரும்.
புதிய கட்டிடத்திற்காக மரங்களை வெட்டி விழ்த்தாமல், மறுநடவு செய்யபட்ட நிகழ்வை சமூக மற்றும் வனஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.