தமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு : விவரம்..!
தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைத்துறை கீழ் செயல்படும் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் கடக்கும் நல்லூர், பாளையம், வைகுந்தம், எலியார்பத்தி, கொடை ரோடு, மேட்டுப்பட்டி, விக்கிரவாண்டி, பொன்னம்பலப்பட்டி, நத்தக்கரை, புதூர்பாண்டியபுரம், திருமாந்துரை, மணவாசி, வாழவந்தான்கோட்டை, வீரசோழபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுங்கச்சாவடிகளுக்கும் ஏற்ப கட்டணம் மாறுபடும். மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தின் படி, 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கார், ஜீப், பயணிகள் வேன்களுக்கு ஒரு வழி பயணத்திற்கான கட்டணம் 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 80 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பலமுறை பயண கட்டணம் 125 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 145 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக சரக்கு வாகனங்களுக்கான பலமுறை பயண சுங்கக்கட்டணம் 215 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்கள், பேருந்துகளுக்கான கட்டணம் 285 ரூபாய் மற்றும் 430ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கன ரக வாகனங்களுக்கான ஒருவழி பயணத்துக்கு 460 ரூபாயும், 690 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஓவ்வொரு சுங்கச்சாவடிகளுக்கும் இந்த கட்டணம் வேறுபடும்.
சேலத்தில் உள்ள வைகுண்டம் சுங்கச்சாவடியில் லாரி மற்றும் டிரக், பேருந்துகளுக்கு ஒருமுறை செல்ல பழைய கட்டணம் 170 ரூபாயாக இருந்தது. அது 10 ரூபாய் கட்டணம் உயர்ந்து 180 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. லாரி மற்றும் டிரக், பேருந்துகளுக்கு ஒரு நாளைக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வர ரூ.255 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 10 ரூபாய் உயர்ந்து ரூ.265 வசூலிக்கப்படுகிறது.
இதுபோல பல வாகனங்கள் ஒருமுறை செல்ல ரூபாய் 265 பழைய கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் தற்போது 20 ரூபாய் அதிகரித்து ரூபாய் 285 அதிகரித்துள்ளது. பல அச்சு வாகனங்கள் ஒரு நாளைக்கு பலமுறை வந்து செல்ல செலுத்த வேண்டிய கட்டணம் 410 ரூபாயில் இருந்து, 430 உயர்ந்துள்ளது. கார் மற்றும் ஜீப், வேன்களுக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.