கும்பகோணம்| 12ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு.. கொலை வழக்கில் 15 சக மாணவர்கள் கைது!
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்த கவியரசன் என்ற மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதில் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவம் பார்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவர் நள்ளிரவு உயிரிழந்தார்..
உயிரிழந்த மாணவரின் உடலை பிரேத பரிசோதனை கூடத்திற்கு உடலை கொண்டு சென்ற நிலையில், மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 15 சக மாணவர்கள் மீது கொலை வழக்கு பதியப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த கவியரசனுக்கும் அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், கடந்த 4ம் தேதி பள்ளி விட்டு வீடு திரும்பிய கவியரசனை 11ம் வகுப்பு மாணவர்கள் 15பேர் தாக்கியதில் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த மாணவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மாணவனுக்கு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் முன்னேற்றம் இல்லாததால் மாணவன், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கவியரசன் உயிரிழந்தார்.
15 மாணவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு!
உயிரிழந்த மாணவன் கவியரசனின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு சென்றபோது உறவினர்கள் தடுத்து நிறுத்தி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்திற்கு காரணமான மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்தசூழலில் மாணவன் கவியரசன் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.. மாணவனை தாக்கிய 15 சக மாணவர்கள் மீது அடிதடி, கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு தஞ்சை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

