ரூ.1.5 கோடி அபராதம் தொடர்பான வழக்கு.. உத்தரவை எதிர்த்து விஜய் மேல்முறையீடு!
2015-16 நிதியாண்டில் 35.42 கோடி ரூபாய் வருமானம் அறிவித்த விஜயின் கணக்கில், ‘புலி’ படத்துக்கான 15 கோடி ரூபாய் வருமானம் மறைக்கப்பட்டதாக வருமான வரித்துறை கண்டறிந்து, 2022 ஜூன் 30 அன்று ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை சட்டபூர்வமானது என கூறி தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2015-16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்து, வருமானத்தை மறைத்ததற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்தசூழலில், அந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து, உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மேல் முறையீட்டு மனுவில் தனது தரப்பு கருத்தை தனி நீதிபதி கவனத்தில் கொள்ள தவறிவிட்டார் என்றும், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2015ஆம் ஆண்டு சோதனையில் உள்ள வருமானத்தை அதன் பிறகு எனக்கு வருமானம் வந்ததாக கூறி அபராதம் விதித்துள்ளனர், எனவே வருமான வரித்துறை அதிகாரிகளின் நடவடிக்கை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் தனது மேல் முறையீட்டு முடிவில் நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

