தமிழகத்தில் 12 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு: ஆர்டிஐ தகவல்
தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 12 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.
கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஈஸ்வரன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், நாய்க்கடிகள் தொடர்பாக சில தகவல்களை பெற்றுள்ளார். அதன்படி தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 12 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இதில் 95 சதவிகிதம் தெருநாய்களால் தான் பாதிப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் நாய்கடி தடுப்பூசி போட மருந்துக்கு அரசு செலவழிக்கும் தொகை 100 ருபாய் மட்டுமே. ஆனால் அதே மருந்து வெளிமார்க்கெட்டில் வாங்கினால் 1300 ருபாய் ஆகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு மருத்துவமனைக்கும், வெளிமார்க்கெட்டிற்கும் இவ்வளவு தொகை வேறுபாடு இருப்பது, வெளிப்படையாக தெரிந்தும் ஏன் மருந்து விலையை கட்டுப்படுத்த அரசு முயலவில்லை என்ற குற்றச்சாட்டையும் ஈஸ்வரன் முன்வைத்துள்ளார்.