10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கொரோனா வைரஸ் தொற்றால் தள்ளிவைக்கப்பட்டன. இதையடுத்து ஜூன் மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிப்புகள் வெளியாகின. இந்நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.