தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 102 டன் குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் மெமோரியல் பள்ளியில் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக போதையில்லா தமிழகம் என்னும் தலைப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சிவ.வீ மெய்யநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசும்போது, “மே 31ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, தமிழகத்தில் புகையிலை, குட்கா போன்ற பொருட்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது, தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்க காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கடந்த 9 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 800 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது கடந்த ஒரு ஆண்டில் எடுத்த தீவிர நடவடிக்கையால் 102 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுவரை குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்ததற்காக 3063 கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, 21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் பெங்களூரில் இருந்து காய்கறி வண்டியில் போதை பொருட்களை கொண்டு வருகின்றனர் அதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.