இருசக்கர வாகனத்திற்கு வழிவிட்டதால் கவிழ்ந்த கார் - சிறுவன் உயிரிழப்பு
மதுரையில் திருமண நிகழ்ச்சி சென்ற கார் கவிழ்ந்த விபத்தில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்த முத்தையா என்பவர் தனது உறவினர்களுடன் உசிலம்பட்டியில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்றுகொண்டிருந்தார். கார் கரடிக்கல் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் ஒன்று எதிரே வந்தது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சிவன், காரை திருப்பிய போது கார் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் கார் சாலையில் உருண்டு அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தால் காரில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அத்துடன் ஜெயக்குமார் என்பவரின் மகன் சக்திவேல் (10) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து காரில் இருந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.