சென்னையில் ஒன்றரை மாத குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழப்பு - தடுப்பூசி காரணமா என விசாரணை

சென்னையில் ஒன்றரை மாத குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழப்பு - தடுப்பூசி காரணமா என விசாரணை

சென்னையில் ஒன்றரை மாத குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழப்பு - தடுப்பூசி காரணமா என விசாரணை
Published on

சென்னையில் ஒன்றரை மாதம் ஆன ஆண் குழந்தையொன்று மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி போட்டப்பட்டதால் குழந்தை இறந்ததா என விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

திண்டிவனத்தை சேர்ந்தவர்கள் அய்யப்பன் - முத்துலட்சுமி (30) தம்பதி. இவர்களில் அய்யப்பன், விருத்தாசலத்தில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பச்சிளங்குழந்தை என்பதால் முத்துலட்சுமி சென்னை ஆயிரம்விளக்கு சுதந்திர நகரில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி குழந்தையை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி குழந்தைக்கு 45 நாட்களில் செலுத்த வேண்டிய அம்மை தடுப்பூசியை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் செலுத்தப்பட்டிருக்கிறது. இதன்பின் 25-ம் தேதி குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது.

உடனே முத்துலட்சுமி தனது குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று காண்பித்த போது அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு சென்ற ஆயிரம் விளக்கு போலீசார் குழந்தை உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே குழந்தைக்கு தடுப்பு ஊசி போட்டதால் தான் இறந்து விட்டதாக பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே குழந்தை இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என ஆயிரம் விளக்கு போலீசார் தெரிவித்துள்ளனர்.

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசி விளக்கமளிக்கையில், “எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு மருந்து தொகுப்பில் இருந்து 35 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த ஒரு குழந்தையை தவிர மற்ற குழந்தைகள் அனைவரும் நலமுடன் உள்ளனர். குழந்தைக்கு வேறு ஏதேனும் கண்டறியப்படாத நோய்கள் இருந்ததா என்றும், இறப்பிற்கு என்ன காரணம் என்பதும் நிபுணர் குழுவின் ஆய்வுக்கு பிறகே தெரிய வரும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com