”தொகுதியில் குழந்தைகளிடம் கேட்டால் என்னைதான் எம்.எல்.ஏ என்று கூறுவார்கள்” - ஜெயக்குமார்

”தொகுதியில் குழந்தைகளிடம் கேட்டால் என்னைதான் எம்.எல்.ஏ என்று கூறுவார்கள்” - ஜெயக்குமார்
”தொகுதியில் குழந்தைகளிடம் கேட்டால் என்னைதான் எம்.எல்.ஏ என்று கூறுவார்கள்” -  ஜெயக்குமார்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் இந்த அரசு செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தங்கசாலை தொழில் பயிற்சி நிலையம் அருகே இருக்கும், நாகாத்தம்மன் ஆலய திருவிழாவில் பங்கேற்ற பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”சென்னையில் லேசான மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்குகிறது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முடிந்த பின்னரும் குழி மூடப்படுவதில்லை. முறையான பராமரிப்பு இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் ஒரு மாற்று பாதைக்கான பதாகை கூட வைக்காமல் காவல்துறை செயல்படுகிறது. அதிமுக ஆட்சியில் பெரிய மழைக்கு கூட பெருமளவில் கால்வாய்களில் தண்ணீர் தேங்கியதில்லை.

ஆனால் தற்போது அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. அதுமட்டுமில்லாமல் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து விடுகிறது. அதிமுக காலத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் எவையும் சீராக பராமரிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “அதிமுகவிற்கு நல்ல பெயர் வரக்கூடாது என்ற திமுகவின் ஈகோவால் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. ராயபுரம் தொகுதி எம்எல்ஏ பெயருக்கு தான் எம்எல்ஏவாக இருக்கிறார் தொகுதியில் எந்த ஒரு பணியும் செய்யாமல் அரசிடம் சம்பளம் மட்டுமே வாங்குகிறார். ஆனால் தொகுதிக்கு வந்து எட்டிப் பார்ப்பதுகூட இல்லை. இப்போதும் ராயபுரம் தொகுதிக்கு எம்எல்ஏ யார் என குழந்தைகளிடம் கேட்டால் என்னை தான் கூறுவார்கள் திமுகவின் எம்எல்ஏ வை இங்கு அதிகமானோருக்கு தெரியவில்லை.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், மக்களுக்கு பேருந்து மற்றும் சத்துணவு உள்ளிட்ட அதிகமான திட்டங்களை கொண்டு வந்தார். அதேபோல் ஜெயலலிதா பெண்களுக்கு கர்ப்பிணிகளுக்கு என அதிக நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் கொண்டுவந்தார். விலை இல்லா மடிக்கணினி, மிதிவண்டி போன்ற நல்ல திட்டங்களை எல்லாம் விடியா அரசு மாற்றி வருகிறது.

திமுக கொண்டு வந்த விலையில்லா திட்டங்கள் அனைத்தும் ஊதாரி திட்டங்களாக தான் இருக்கிறது. இலவசங்கள் தொடர்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதற்கு உச்சநீதிமன்றம் கொட்டு வைத்துள்ளது” என்று விமர்சித்தார்.

மேலும், “மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசியது தவறு. அதே வேளையில் அமைச்சர் பேசியதும் தவறு. செருப்பு வீசுவதற்கு தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிடுவது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது. ஆனால் அதில் பேசியிருக்கும் குரல் அவர்தான் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

தொடர்ந்து எட்டு வழிசாலையை அப்போது எதிர்த்த திமுக தற்பொழுது ஆட்சிக்கு வந்ததும் பல்டி அடிக்கிறார்கள். குறிப்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு, குழந்தைகளுக்கு கிளுகிளுப்பு காட்டி விளையாட்டு காட்டுவது போல் மக்களிடம் விளையாட்டு காட்டுகிறார்.

அதேபோல் பரந்தூரில் விமான நிலையம் கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளின் பத்தாயிரம் ஏக்கர் நிலம் அபகரிப்பு செய்யப்பட்டு அழிய போகிறது. விவசாயிகளிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமல் விவசாயிகளை நோகடிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். விவசாயிகள் இதனை பொறுக்காமல் பொங்கி எழுந்தால் இந்த ஆட்சி தாங்காது என கூறினார்.

எடப்பாடி பழனிசாமி சட்ட ஒழுங்கு சீர்கேடாக உள்ளது என்பது குறித்து வெளியிட்ட அறிக்கைக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்து வந்த கடுதாசி மொட்ட கடுதாசி. திமுக செய்யும் குற்றங்களை மறைக்கத்தான் காவல்துறை செயல்பட்டு வருகிறது. அந்த மொட்டை கடிதாசியிலும் 15 கொலைகள் இல்லை 12 கொலைகள் தான் என பெருமையாக சொல்கின்றனர்.

திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. காவல்துறையினருக்கு தற்பொழுது பாதுகாப்பில்லை, காவல்துறையினர் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் அதிகரித்துவிட்டது. அவர்களின் நிலைமை பரிதாபம் ஆகிவிட்டதாகவும், காவல்துறை மு க ஸ்டாலின் குடும்பத்தினரின் ஏவல் துறையாகிவிட்டது.

ஆந்திராவில் நடந்த நிகழ்வு போலவே மாமனாரை கவுத்துவிட்டு மருமகன் ஆட்சிக்கு வரப்போகும் சம்பவம் தமிழகத்தில் நடக்கத்தான் போகிறது” என்று கூறினார்.

அத்துடன், “திமுக அரசாங்கம் ஒரு ஹிட்லர் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு துணை போகும் கட்சியின் ஆட்சி தான் திமுக ஆட்சி. காவல் துறையினரை சுதந்திரம் இல்லாமல் விடியா அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் மட்டுமே குற்றவாளிகளுக்கு பயம் என்பது பறந்து போய் சிசிடிவிக்கு முத்தம் கொடுத்து குற்றவாளி செல்லும் சம்பவம் எல்லாம் அரங்கேயிருக்கிறது” எனவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com