"பார்வையில் படும்படியான தனியார் கட்டடமும் பொது இடம்தான்" - மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்
உள்ளாட்சித் தேர்தலுக்காக, தனியார் இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற்றிருந்தாலும் அந்த இடம் ஒருவரின் பார்வையில்படும் படி இருந்தால் விளம்பரம் செய்யக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக விளம்பரங்கள் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தேர்தல் நடத்தை விதிகளின் படி, போட்டியிடுவோர் பொது இடங்களில் பதாகைகள், கொடிகள், சுவர் விளம்பரம், சுவரொட்டிகள் ஓட்டுவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வரையறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு திறந்தவெளிகள் தடுப்பு சட்டம் 1959ல் பொது இடங்கள் என்பது, பொது இடத்தில் இருக்கும் அல்லது பார்வையில் படும்படியான தனியார் இடம் மற்றும் கட்டடமும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இடங்களில் உரிமையாளர்களின் அனுமதி பெற்றிருந்தாலும் சுவரில் விளம்பரம் செய்யக்கூடாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதேபோல், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.