“என் மகனை என்கவுண்ட்டர் செய்ய திட்டமிடுகிறார்கள்”: காசியின் தந்தை புகார்

“என் மகனை என்கவுண்ட்டர் செய்ய திட்டமிடுகிறார்கள்”: காசியின் தந்தை புகார்
“என் மகனை என்கவுண்ட்டர் செய்ய திட்டமிடுகிறார்கள்”: காசியின் தந்தை புகார்

தன்னுடைய மகனை போலீசார் என்கவுண்ட்டர் செய்ய திட்டுமிட்டுள்ளதாக காதல் மோசடி மன்னன் காசியின் தந்தை புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவர் சமூக வலைதளம் மூலம் பல பெண்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காசி மீது ஏற்கெனவே இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது மேலும் இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சிறையில் உள்ள காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனக்கோரி நாகர்கோவில் கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் போலீசார் காசியை நேற்று நேரில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நடைபெற்ற விசாரணையில், காசியை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். விசாரணையின் போது காசியை சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் நேரில் அழைத்து சென்று விசாரிக்கவும், இந்த விவகாரத்தில் காசிக்கு உறுதுணையாக இருந்த அவரது நண்பர்களை விசாரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல பெண்களை காதலிப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நாகர்கோவில் பகுதியை சேர்ந்த காசி தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தை இன்று மாவட்ட ஆட்சியரிடம் தனது மகனை போலீசார் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக புகார் மனு அளித்தார். காசியின் தந்தை தங்கபாண்டியனை அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்ற கோட்டார் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com