”திருச்சியில் விரைவில் வருகிறது புதிய காவிரி பாலம்” - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

”திருச்சியில் விரைவில் வருகிறது புதிய காவிரி பாலம்” - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
”திருச்சியில் விரைவில் வருகிறது புதிய காவிரி பாலம்” - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், தில்லைநகர், உறையூர், மரக்கடை, சிந்தாமணி, மலைக்கோட்டை ஆகிய பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோக குழாய்களை புனரமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. திருச்சி உறையூர்பாளையம் பஜாரில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டிவைத்து, புனரமைப்பு பணிகளைத் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
“திருச்சி மாநகராட்சி பகுதியில் ₹54.27 கோடி  செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் 
103.425 கி.மீ நீளத்திற்கு புதிய குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் நான்கு இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியம், இரண்டு இடங்களில் கீழ்நிலை நீர்தேக்க தொட்டியும் அமைக்கப்பட உள்ளது.
தொடர்ந்து ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது.
திருச்சியில் சிந்தாமணியில் இருந்து மாம்பழச்சாலையை இணைக்கும் காவேரி பாலம் வலுவிழந்து உள்ளது. அந்த பாலத்திற்கு அருகிலேயே ₹80 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய காவேரி பாலம் கட்டப்படவுள்ளது.
திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 60 அடி அகலத்தில் திருச்சி நீதிமன்றத்தில் இருந்து அல்லித்துறை வரை சாலை புதிய சாலை விரிவாக்கம் செய்து அமைக்கப்படும். அதே போல உறையூர் முதல் வயலூர் வரை நேரடி சாலை அமைக்கப்பதற்கான திட்டவரையரை தயார் செய்யப்படுகிறது.
திருச்சியில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகில் மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கான சந்தையும் புதிதாக அமைக்கப்படும். திருச்சியில் செயல்பட்டு வரும் வேறு எந்த சந்தையையும் இடமாற்றம் செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை.
மாநகராட்சி விரிவாக்கத்தின் போது மாநகராட்சியோடு கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்கப்படும்போது அதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், தங்களது பதவிக்காலம் முடியும் வரை அப்பதவியில் நீடிப்பார்கள். அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவார்கள்.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது. தேர்தலை எப்பொழுது நடத்தலாம் என ஆலோசனை செய்யப்பட்டு, அத்தேர்தலுக்கான தேதியை ஒரு சில நாட்களில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பார்” என்று கே.என்.நேரு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com