இணையத்தை ஆளும் மொபைல்... கோவையில் நடக்கும் டிஜிட்டல் கருத்தரங்கு..!
டிஜிட்டல் கருத்தரங்கு (Mobile and Digital Conclave)வரும் 27-ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.
Fourth Dimension சார்பில் கோவை ரெசிடென்சி டவரில் 'Mobile and Digital Conclave' என்ற கருத்தரங்கு வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற பெரிய அளவிலான மொபைல் போன் சார்ந்த கருத்தரங்கு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த நிகழ்ச்சியில் 40 முக்கிய பிரபலங்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். குறிப்பாக டிஸ்கவரி சேனலின் தெற்கு ஆசிய எம்டி, ‘பிரிள் இங்க்’ இயக்குநர், ஏர் ஏசியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர், புதிய தலைமுறையின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், The federal இணையதளத்தின் Editor in Chief ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து Fourth Dimension நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சங்கர் கூறும்போது, “தமிழ்நாட்டில் முதல் முறையாக பெரிய அளவிலான மொபைல் போன் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்று தங்களின் கருத்துகளை மக்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
(Fourth Dimension சி.இ.ஓ. சங்கர்)
மொபைல் போன்களை வைத்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகளை தவிர வேறு என்ன வகையிலான ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மொபைல் போன்களை பயன்படுத்த முடியும் என்பது குறித்து விளக்கம் கொடுக்கப்படும். நீங்கள் ஒரு தொழில் செய்கிறீர்கள் என்றால் அதனை எவ்வாறெல்லாம் பிரபலப்படுத்தலாம்..? அதனால் உங்களுக்கு என்னென்ன லாபங்கள் கிடைக்கும் என்பன குறித்தும் தெளிவு கொடுக்கப்படும். தமிழ்நாடு மக்கள் குறிப்பாக போன்களை அதிகம் பயன்படுத்துவோர்கள், இளம் தொழில்முனைவோர்கள் அதிகளவில் இதில் பங்குப்பெற்று நிகழ்ச்சியின் மூலம் பயன்களை பெற வேண்டும். மக்கள் அதிகளவில் வந்து பங்கேற்று ஆதரவுகளை தெரிவிப்பதன் மூலம், நிகழ்ச்சிகள் வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக தமிழ்நாட்டில் அதிகம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.