”நரபலி கொடுக்கிறோம் தொந்தரவு செய்யாதீர்கள்”-கதவை உடைத்த போலீசார்..ஆரணியில் பகீர் சம்பவம்!

”நரபலி கொடுக்கிறோம் தொந்தரவு செய்யாதீர்கள்”-கதவை உடைத்த போலீசார்..ஆரணியில் பகீர் சம்பவம்!
”நரபலி கொடுக்கிறோம் தொந்தரவு செய்யாதீர்கள்”-கதவை உடைத்த போலீசார்..ஆரணியில் பகீர் சம்பவம்!

பேயை விரட்டுவதாக கூறி மூன்று நாள் கதவை பூட்டிவிட்டு உள்ளே பில்லி சூனியம் செய்து, நரபலி கொடுக்க இருந்த நபர்களை கதவை உடைத்து உள்ளே புகுந்து போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்வி நகரம் தசரா பேட்டை பகுதியைச் சேர்ந்த தவமணி. இவர் நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி காமாட்சி மூத்த மகன் பூபாலன். பூபாலன் தாம்பரம் ஆயுதப்படை பிரிவில் போலீசராக பணிபுரிந்து வருகின்றார். இரண்டாவது மகன் பாலாஜி மகள் கோமதி மற்றும் அறியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பூசாரியான பிரகாஷ் மூவரும், தங்களுடைய வீட்டை பூட்டிவிட்டு கடந்த மூன்று நாட்களாக வீட்டில் உள்ளே பில்லி சூனியம் ஏவல் விரட்டுவதாக கூறி பூஜை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை ஆறு மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு ஆறு பேரும் உள்ளே பில்லி சூனியம் ஏவல் விரட்டுவதாக சிறப்பு பூஜை நடத்தி உள்ளனர். இவர்கள் கத்தி கூச்சலிட்டு பூஜை செய்ததால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பயந்து கொண்டு ஆரணி தாசில்தார் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆரணி கிராமிய போலீசார் மற்றும் தாசில்தார் ஜெகதீசன் ஆகியோர் முதலில் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று கதவை தட்டி திறக்க கூறியுள்ளனர். அவர்கள் ஆழ்ந்த பூஜையில் இருந்ததால் கதவை திறக்காததால், தீயணைப்பு துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திரண்டு வந்த தீயணைப்பு விரர்களும் கதவை தட்டி உள்ளனர்.



இந்த சத்தத்தை கேட்டதும் நிலை தடுமாறி உள்ளே இருந்த நபர்கள் ”எங்களுடைய பூஜை கெடுத்தால் நாங்கள் அனைவரும் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்து விடுவோம் எங்களை தடுக்காதீர்கள்” என்று போலீசாரை எச்சரித்துள்ளனர். மேலும் ”உள்ளே நரபலி கொடுக்க இருப்பதால் எங்களை தொந்தரவு செய்ய வேண்டாம். எங்களை இன்று ஒரு நாள் முழுவதும் தடுக்க வேண்டாம். இரவு நரபலி பூஜை கொடுத்தவுடன் நாங்களே கதவைத் திறக்கிறோம், அப்பொழுதுதான் எங்கள் பூஜை நிறைவேறி நாங்கள் நினைத்ததை அடைய முடியும்” என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் போலீசார் ஜேசிபி எந்திரம் கொண்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே போக முயற்சித்த போது, ஜேசிபி கதவை திறக்காத வண்ணம் உள்ளே இருந்தவர்களும் தடுக்கும் பணியில் ஈடுபட்டதால் முட்டி மோதிக் கொண்டு போலீசார் உள்ளே புகுந்து, பில்லி சூனியம் விரட்ட பூஜையில் இருந்த அனைத்து நபர்களையும் வெளியே இழுத்து வந்தனர். இதில் ரத்த வெறியில் இருந்த பூசாரி பிரகாஷ் போலீசாரை கடித்துக் குதற ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அனைவரையும் கைது செய்த ஆரணி கிராமிய போலீசார் மற்றும் ஆரணி டிஎஸ்பி உள்ளிட்டோர் இரவு பூஜையில் கலந்து கொள்ள வந்த பூசாரி குறித்தும் நரபலி குறித்தும் கேட்டறிந்தனர். போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவர்கள் ஆறு பேரையும் கைது செய்து ஆரணி கிராமிய காவல் நிலையம் கொண்டு வந்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். நரபலியை தடுத்து நிறுத்திய சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com