இந்தியாவின் நம்பிக்கையை சிதைக்க காத்திருக்கும் இலங்கை.. இடம் கொடுக்குமா ரோகித்தின் படை!

இந்தியாவின் நம்பிக்கையை சிதைக்க காத்திருக்கும் இலங்கை.. இடம் கொடுக்குமா ரோகித்தின் படை!
இந்தியாவின் நம்பிக்கையை சிதைக்க காத்திருக்கும் இலங்கை.. இடம் கொடுக்குமா ரோகித்தின் படை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் பங்கேற்க இந்திய அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா அல்லது இலங்கை அணி நுழைய வாய்ப்புள்ளதா என்பது குறித்து இக்கட்டுரையில் பார்ப்போம்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, தற்போது பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. 4வது போட்டி இன்று அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்வதாக உள்ளது. முக்கியமாக, இந்த தொடர் இந்தியாவுக்கு வாழ்வா, சாவா என்கிற நிலையில் உள்ளது.

வெற்றிபெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா!

இந்த தொடரின் 3வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதையடுத்து, அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதுவதற்கான முதலிடத்தை மீண்டும் தக்க வைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும், அதற்கடுத்த இடத்தில் இலங்கை அணி உள்ளது. தவிர, இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கான டெஸ்ட் தொடர் இன்னும் முடியவில்லை. இதனாலேயே இந்திய அணிக்கு பிரச்னை உருவாகி உள்ளது. ஏற்கெனவே இந்த தொடரில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே, ஐசிசி உலக டெஸ்ட் இறுதிச்சுற்றுக்குள் நுழைய முடியும். அதேநேரத்தில், இந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவினாலோ அல்லது டிரா செய்ய நேரிட்டாலோ அது இலங்கைக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

காத்திருக்கும் இலங்கை!

4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று விட்டால் எந்த சிக்கலுமின்றி, இறுதிச்சுற்றுக்கான பட்டியலில் 2வது இடத்தில் நுழைந்துவிடும். 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் அடிப்படையில் இலங்கை அணியைவிட புள்ளிப் பட்டியலில் முன்னேறி விடும். இதனால் இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிவு இந்திய அணியை எந்த விதத்திலும் பாதிக்காது. இல்லையேல், இலங்கை அணியின் வெற்றி தோல்விகளைப் பொருத்தே இந்திய அணியின் இறுதிச்சுற்று வாய்ப்பு பரிசீலிக்கப்படும்.

அதேநேரத்தில் 4வது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்து நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தால், இந்திய அணி புள்ளிப் பட்டியலில் (3வது இடம்) இருந்து கீழிறங்க வாய்ப்புள்ளது. ஆக, போட்டியை டிரா செய்வதை விட, வெற்றி பெறுவதிலேயே இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும். ஒருவேளை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி இரண்டுக்கும் குறைவான வெற்றியை பெற்றால் அதனால் இறுதிச் சுற்றின் 2வது இடத்துக்கு முன்னேற முடியாது. அதாவது 1-1 அல்லது 1-0 என்ற கணக்கிலோ இலங்கை அணி வெற்றி பெற்றால், அது இந்தியாவுக்குச் சாதகமான சூழ்நிலையையே உருவாக்கும்.

அகமதாபாத்தில் இன்று தொடங்கிய கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து ஆடி வருகிறது. இன்று முதல் நாள் முடிவுற்ற ஆட்டத்தின்படி, அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க பேட்டர் ஆட்டமிழக்காமல் 104 ரன்கள் எடுத்துள்ளார். அவரைத் தொடர்ந்து கேமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டன் ஸ்டீவ் சுமித் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் முகம்மது ஷமி 2 விக்கெட்களையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com