சச்சின் விமர்சனத்தை உண்மையாக்கியதா ‘தோனி - கேதர்’ ஆட்டம்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் நிதான ஆட்டம் குறித்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 213 ரன்களுக்கு ஆப்கானை சுருட்டி வெற்றி பெற்றிருந்தாலும், பேட்டிங் சரிவு விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக, தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் நிதானமாக ஆட்டம் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் விக்கெட் சரிவில் இருந்து இந்திய அணியை இந்த ஜோடி மீட்டு இருந்தாலும், இறுதிவரையிலும் தொடர்ந்து அப்படியே ஆடியதை ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.
தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் ஆட்டத்தை சச்சின் டெண்டுல்கரும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அடித்து விளையாட வேண்டும் என்ற உள்நோக்கமே இல்லாமல் இந்த ஜோடி ஆடியதாக சாடியிருந்தார். குறிப்பாக சுழற்பந்துகளில் அதிக அளவில் தடுமாறுவதையும் அவர் குறிப்பிட்டிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின் கூட சேவாக்கும் தோனியின் நிதானமான ஆட்டம் குறித்து கிண்டலாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் நிதான ஆட்டம் சச்சின் விமர்சனத்தை உறுதி செய்யும் வகையில் இருந்தது. 5 ஓவர்களில் 71 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் 20 சிங்கிள் அடித்தது அவர்களுக்கு அடித்து விளையாட வேண்டும் என்ற நோக்கமே இல்லாததை தெளிவாக வெளிப்படுத்தி இருந்தது.
குறிப்பாக, 39 ஓவர்கள் முடிவில் இரு அணிகளும் கிட்டத்தட்ட ஒரே அளவில்தான் ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்பதை ஒப்பிட்டு பலரும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இந்திய வீரர்கள் இலக்கை நோக்கி சரியாக விளையாடி இருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாகியிருக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.
நேற்றைய போட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த சச்சின், தோனி - கேதர் ஜோடி குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவேயில்லை. இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள் எனக் கூறிவிட்டு பும்ராவை மட்டும் பாராட்டினார். அவரது ட்விட்டரில் ரசிகர்கள் பலரும் ஏன் தோனி - கேதர் ஜோடி குறித்து கருத்து தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தனர்.
நேற்றைய போட்டியை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹூசைன், சவுரவ் கங்குலியும் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஹூசைன், ‘தோனி ஏன் இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆட்டமிழந்துவிட்டு செல்லலாமே. ரசிகர்கள் எழுந்து சென்று கொண்டிருக்கிறார்கள்’ எனக் கூறினார். அதற்கு, ‘என்னால் இந்தக் கேள்விக்கு விளக்கம் அளிக்க முடியவில்லை’ எனக் கங்குலி தெரிவித்துவிட்டார்.

