விளையாட்டு
“தோனியின் சாதனைகளைப் பேசும் புதிய பாடலை எழுதுகிறேன்” - பிராவோ சர்ப்ரைஸ்
“தோனியின் சாதனைகளைப் பேசும் புதிய பாடலை எழுதுகிறேன்” - பிராவோ சர்ப்ரைஸ்
தோனிக்காக புதிய பாடலை எழுதி வருகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ இன்ஸ்டா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் அரட்டை அடிப்பது என்பது ஒரு புதிய கலாச்சாரமாக உருவெடுத்துள்ளது. பலரும் இந்தப் பக்கத்தில் தாங்கள் ரசிக்கும் பிரபலங்களைச் சந்தித்து உரையாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 36 வயதான பிராவோ சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, இன்ஸ்டா பக்கத்தின் நேரலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோனிடம் உரையாடினார். அப்போது அவர், இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு ஒரு சிறப்புப் பாடலை இயற்றி வருவதாக பிராவோ தெரிவித்துள்ளார். இந்த அரட்டையின் போது, சன்னி லியோன் வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டரிடம் ஏதாவது புதிய பாடலில் வேலைசெய்கிறீர்களா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த பிராவோ, “தோனிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பாடலை எழுதப் போவதாகவும் மேலும் அந்தப் பாடலின் தலைப்பு "எண் 7" என்றும் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய பிராவோ, "நான் அவரது வாழ்க்கை, அவரது சாதனைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என நாம் அனைவரும் வைத்திருக்கும் அன்பின் அடையாளம் போன்ற அனைத்தையும் அடிப்படையாக வைத்து இந்தப் பாடலை எழுதப் போகிறேன். பாடலின் தலைப்பு எண் 7" என்று ரகசியத்தை உடைத்தார் பிராவோ. சமீபத்தில், பிராவோ கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பற்றிய புதிய பாடலை வெளியிட்டார். அவர் அந்தப் பாடலுக்கு 'We not giving up' என்று தலைப்பிட்டிருந்தார்.
தோனி பாடல் பணிகள் குறித்து மேலும் சில விவரங்களை பிராவோ தெரிவிக்கும் போது, “தோனி எப்போதும் என்னை நம்புகிறார். பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கும் என்னை ஆதரிக்கிறார். அவர்கள் நான் நானாக இருக்க அனுமதிக்கிறார்கள். நான் டெத் ஓவர்களில் பந்து வீசுவேன். சில சமயங்களில் நான் ரன்கள் எடுக்கச் செல்வதை முடித்துக்கொள்வேன். சி.எஸ்.கே எப்போதும் பந்து வீசும் என் திறனில் நம்பிக்கை வைத்துள்ளது” என்று கூறினார்.