விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடக்கம்
டென்னிஸ் வீரர்களின் மதிப்புக்குரியதாக கருத்தப்படும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் லண்டன் நகரில் இன்று தொடங்குகிறது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை)11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இந்த முறை கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதையொட்டி அங்கு முகாமிட்டுள்ள முன்னணி வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபனை வென்ற நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் இங்கிலாந்தை சேர்ந்த ஜாக் டிராப்பருடன் மோதுகிறார்.
இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச் இந்த முறையும் கோப்பையை கையில் ஏந்தினால் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களான ரோஜர் பெடரர், ரபெல் நடால் ஆகியோரின் சாதனையை தலா 20 கிராண்ட்ஸ்லாம் சமன் செய்து விடுவார். காயம் மற்றும் உடல்தகுதி பிரச்னையால் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் திம் ஆகியோர் விலகி உள்ள நிலையில் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்), ஸ்வாட்ஸ்மேன் (அர்ஜென்டினா), பெரேட்டினி (இத்தாலி) ஆகியோர் கடும் சவால் அளிக்க காத்திருக்கிறார்கள்.
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.36 கோடியாகும். இது முந்தைய சீசனை விட 7.85 சதவீதம் குறைவாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ரூ.17½ கோடியும், 2-வது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.9¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ஏறக்குறைய ரூ.5 கோடி கிடைக்கும்.
இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும். முதல் நாளில் ஜோகோவிச், சிட்சிபாஸ், சபலென்கா, சோபியா கெனின் உள்ளிட்டோர் களம் இறங்குகிறார்கள்.