தினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி ? - மறுக்கப்பட்ட வாய்ப்புகள்

தினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி ? - மறுக்கப்பட்ட வாய்ப்புகள்

தினேஷ் கார்த்திக்கை ஓரம் கட்டுகிறாரா கோலி ? - மறுக்கப்பட்ட வாய்ப்புகள்
Published on

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை தொடர்ந்து விளையாடமால் இருப்பதற்கு பின்னால் அரசியல் இருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.

இந்திய அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் தினேஷ் கார்த்திக். இவர் தூத்துக்குடியில் பிறந்தவர். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பாக 2004ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். பார்ப்பதற்கு இளம் வீரர் போல தெரிந்தாலும், 14 வருடங்கள் அனுபவம் உடைய 33 வயது வீரர்தான் தினேஷ். இந்திய அணியில் இவர் பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் சேர்ந்தார். இவர் மட்டும் தொடர்ந்து இந்திய அணியில் இடம் பெற்றிருந்தால், தற்போது தோனி என்ற ஒருவர் இந்திய அணியில் இருந்திருக்க மாட்டார் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் தோனி இந்திய அணியில் சேர்க்கப்பட்டதே விக்கெட் கீப்பருக்காகதான். இவர்களுக்கு இடையே பார்திவ் படேலும் ஒரு சில போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

14 வருடங்களாக தினேஷ் இந்திய அணியில் அவ்வப்போது விளையாடிய போதிலும், அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த வருடம் 2018 தான். கடந்த மார்ச் மாதம் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரில், பங்களாதேஷுக்கு எதிராக அவர் வெளிப்படுத்திய அதிரடி அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அந்த ஒரே போட்டியில் தினேஷ் கார்த்திக் ஏராளமான ரசிகர்களை சேர்த்துவிட்டார். இந்திய அணி தோல்வியடையும் தருணத்தில் களமிறங்கிய தினேஷ், வெறும் 8 பந்துகளில் 29 ரன்கள் விளாசி வெற்றியை தேடித்தந்தார். அன்று மட்டும் இந்திய அணி தோல்வியடைந்திருந்தால், பங்களாதேஷின் பாம்பு டான்ஸ்க்கு இந்திய ரசிகர்கள் பலியாகியிருப்பர். இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, இலங்கை ரசிகர்களும் தான். இந்த அதிரடிக்குப் பிறகு அனைவரது கவனமும் தினேஷ் மீது குவியத்தொடங்கியது.

இதையடுத்து நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் தினேஷ் அதிரடியை நிறுத்தவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டனாக களமிறக்கப்பட்ட அவர், ஐபிஎல் தொடரில் 498 ரன்களை குவித்து தனக்கு வயதாகவில்லை என்பதை நிரூபித்தார். அத்துடன் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். அதனால் தான், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான தொடர்களையொட்டி வைக்கப்பட்ட யோ-யோ தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றார். ஐபிஎல்-ல் இருந்த தினேஷின் அதிரடி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுடனான தொடர்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அவரது வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் இதுவரை 7 போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது. இதில் அயர்லாந்திற்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் தான் தினேஷுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தொடர்ந்து ரெய்னாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. சில போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவிய போது, தினேஷ் இருந்திருந்தால் ஆட்டம் மாறியிருக்கும் என்ற விமர்சங்களும் எழுந்தன. அவர் அணியில் சேர்க்கப்படாமல் இருப்பதற்கு, இந்திய அணிக்குள் சில அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் விராட் கோலி தான் என்றும் சில கிரிக்கெட் வட்டாரங்கள் சூசகமாக தெரிவித்துள்ளன. 2019ல் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்காக கோலி தனக்கான ஒரு அணியை உருவாக்கி வருவதாகவும், அந்தப் பட்டியலில் தினேஷ் இல்லை எனவும் தகவல் கசிந்துள்ளது. இனிவரும்  டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாக என தகவல்கள் வலம் வருகின்றன. ஆனால் அதை பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com