’சைனாமேன்’ குல்தீப்பை எதிர்கொள்வது, ஏன் கஷ்டம்?
இந்திய கிரிக்கெட் அணியில் சமீபத்தில் அதிகம் பேசப்பட்ட நபர்கள், ’சைனாமேன்’ குல்தீப் யாதவும் மணிக்கட்டைப் பயன்படுத்தி பந்துவீசும் சேஹலும்!
தென்னாப்பிரிக்கத் தொடருக்குப் பிறகு இவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதில் குல்தீப், இந்திய அணியில் இடம் பிடித்து ஒரு வருடம் ஆனதை நண்பர்களோடு கொண்டாடி இருக்கிறார், சின்ன பார்ட்டி வைத்து!
கடந்த வருடம் மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில்தான் குல்தீப் களமிறங்கினார், அறிமுக வீரராக. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் வீழ்த்திய குல்தீப், அடுத்து இலங்கையில் நடந்த டெஸ்டில் விளையாடினார். இதிலும் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் வீழ்த்திய அவர், அடுத்து டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கவில்லை.
அனைத்துவித சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து 60 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் குல்தீப். இருபது ஒரு நாள் போட்டிகளில், 39 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் இந்த 23 வயது ’சைனாமேன்’ ஸ்பின்னரை எதிர்கொள்வது கடினம் என்கிறார்கள் சில பேட்ஸ்மேன்கள்.
இதுபற்றி குல்தீப்பிடம் கேட்டால், ‘கிரிக்கெட்ல நவீன டெக்னாலஜி வந்துடுச்சுன்னு சொல்றாங்க. வீடியோ மூலம் அலசி ஆராய்ந்து எந்த பந்துவீச்சாளரையும் சமாளிக்க முடியும்ங்காது பலரது கருத்து. ஆனா, டெக்னாலஜி பல வருடமா இருக்கு. அதன் மூலமா எல்லா பந்துவீச்சாளர்களையும் கணிக்க முடியாது. பந்தைச் சுழற்றி, திருப்பி பேட்ஸ்மேனை ஏமாற்றினா கண்டிப்பாகத் தடுமாறித்தான் போவாங்க. அதனால் ஸ்பின்னரை தடுக்க முடியாது. வீடியோ ஆய்வு மூலம் என் பந்துவீச்சை புரிஞ்சுக்கிறது எளிதான விஷயமில்லை. அது கஷ்டம். பேட்ஸ்மேனோட மனசை படிச்சு, அதன்படி பந்துவீசுவறதுதான் என் ஸ்டைல். அதை, டெக்னாலஜி கண்டுபிடிச்சுடாது’ என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.
தென்னாப்பிரிக்கத் தொடர் பற்றி கேட்டால், ‘அந்தத் தொடர்ல ஆறு ஒரு நாள் போட்டிகள்ல 15 விக்கெட்டுகள் எடுக்கணும்னு நினைச்சேன். ஆனால், இரண்டு விக்கெட்டுகள் எக்ஸ்ட்ராவா கிடைச்சது. அந்தத் தொடர்ல அணியோட வெற்றிக்கு எனது ரோலும் முக்கியமா இருந்ததால எனக்கு மகிழ்ச்சி. அது எனக்கு முதல் வெளிநாட்டு டூர். இந்தச் சுற்றுப்பயணத்துக்காக கான்பூரில் கடுமையா பயிற்சி மேற்கொண்டேன். என் திறமை மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு’ என்கிற குல்தீப்பிடம் சேஹல் பற்றி பேசினால், ஆர்வமாகிறார்.
” மணிக்கட்டைப் பயன்படுத்தி பந்துவீசும் சேஹலோட நான் கடந்த சில வருடங்களாத் தொடர்பில் இருக்கிறேன். ரெண்டு பேரோட நோக்கமும் விக்கெட் வீழ்த்துறதுதான். எங்கள் பந்துகள்ல சிக்சரும் பவுண்டரியும் போகுங்கறது உண்மைதான். அது எங்களை பாதிச்சுடாது. ஏன்னா, அதோடு விக்கெட்டும் எங்களுக்கு கிடைக்கும். ஒரு நாள் போட்டிகள்ல மிடில் ஓவர்கள்தான் முக்கியம். அந்த ஓவர்கள்ல விக்கெட் வீழ்த்த முயற்சிப்பதுதான் எங்கள் வேலை. அது வொர்க் அவுட் ஆகியிருக்கு’ என்கிறார் குல்தீப்.
சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து ஒரு வருடம்தான் ஆகிறது குல்தீப் யாதவுக்கு. ஆனால், ஐபிஎல் போட்டியில் கடந்த சில வருடங்களாக விளையாடி வருகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த வருடம் ரூ.5.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது இவரை. இந்த வருட ஐபிஎல் போட்டியில் அதிகம் கவனிக்கப்படும் வீரர்களில் இவரும் ஒருவர்.
‘கண்டிப்பா. முன்பை விட இப்போ பொறுப்பு அதிகரிச்சிருக்கு. கொல்கத்தா அணியில இது எனக்கு நாலாவது வருஷம். ஆவலா எதிர்பார்த்துட்டிருக்கேன்’ என்கிறார் குல்திப்!