3வது டி20 போட்டியிலும் வெற்றி - வெஸ்ட் இண்டீஸை வாஷ் அவுட் செய்த இந்தியா
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டியில், இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.
அமெரிக்காவின் கயானாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் லீவிஸ், நரைன், ஹெட்மயர் ஆகியோர் தீபக் சஹாரின் பந்துவீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் அனுபவ வீரர் பொல்லார்ட் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட, மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது.
இதனையடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தவான் 3 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் ராகுல் 20 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த கோலி மற்றும் பந்த் ஆகியோர் அரை சதம் கடந்தனர். இறுதி வரை களத்தில் நின்ற பந்த் 65 ரன்கள் குவித்து இந்திய அணி, 19.1 ஓவர்களில் இலக்கை கடக்க உறுதுணையாக இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் தீபக் சஹார் ஆட்டநாயகன் விருது பெற்றார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் முத்திரை பதித்த குருனல் பாண்ட்யா தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார்.