’யோ- யோ’ டெஸ்ட்டில் தேர்வாகிவிட்டதாக தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்க, யோ-யோ டெஸ்ட் இன்று பெரும் பிரச்னையாக இருக்கிறது. இந்த உடல் தகுதி டெஸ்ட்டில் தேர்வாகாததால் முன்னணி வீரர்களான யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்றோர் அணியில் இடம் கிடைக்காமல் உள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு முடிவு செய்தது.
இதற்காக கடந்த அக்டோபர் மாதம் யோ யோ டெஸ்ட்டுக்கு அழைப்பு விடுத்தனர். அதில் அவர் தேர்வாகவில்லை. தேர்வாகி இருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றிருப்பார். இந்நிலையில் இப்போது அவருக்கு மீண்டும் அழைப்பு வந்தது. பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நேற்று நடந்த யோ-யோ டெஸ்ட்டில் அவர் பாஸ் ஆகியுள்ளார்.
இதுபற்றி வாஷிங்டன் சுந்தர் கூறும்போது, ‘கடந்த முறை அழைத்தபோது துலீப் டிராபியில் விளையாடி கொண்டிருந்தேன். கால அவகாசம் இல்லாததால் முன்னேற்பாடு இல்லாமல் சென்றேன். அதனால் தேர்வாகவில்லை. இப்போது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் என்னை தயார்படுத்திக்கொண்டு சென்றேன். தேர்வாகிவிட்டேன்’ என்றார்.
இதையடுத்து இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.