'விராட் கோலி நலமுடன் இருக்கிறார்: கடைசி டெஸ்டில் பங்கேற்க வாய்ப்பு' - கேஎல் ராகுல்
கேப்டன் விராட் கோலி வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மூன்றாவது டெஸ்டில் விளையாட அவர் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கேஎல் ராகுல் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. 2-வது டெஸ்டில் கேப்டன் விராட் கோலிக்கு முதுகுவலி என்பதால், அவருக்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை கேஎல் ராகுல் ஏற்றிருந்தார். விராட் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி களமிறங்கினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், கேப்டன் விராட் கோலி வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் மூன்றாவது டெஸ்டில் விளையாட அவர் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கேஎல் ராகுல் கூறியுள்ளார்.
போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேஎல் ராகுல் கூறுகையில், "விராட் கோலி தற்போது நலமுடன்தான் இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக வலைப் பயிற்சியில் பீல்டிங் செய்தார்; ஓடினார், அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், கடைசி டெஸ்டில் அவர் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது. முகமது சிராஜிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வாய்ப்புள்ளது. இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் இருப்பதால் ஒரு பிரச்னையும் இருக்காது. மூன்றாவது டெஸ்டில் வெற்றிபெற கடுமையாக போராடுவோம்" என்றார்.