பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்
பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி இன்று எஸ்.ஜி பிங்க் நிற பந்துகளுடன் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
இந்தியா-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இந்த மாதம் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டி முதல் முறையாக பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. வழக்கமாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படும். அந்தவகையில் இந்தப் போட்டியில் முதல் முறையாக எஸ்.ஜி நிறுவனத்தின் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கும் இடையே மூன்று நாட்கள் மட்டுமே உள்ளதால் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி பெற போதிய கால அவகாசம் இல்லை. ஆகவே இந்திய அணி சார்பில் இன்று இந்தூரில் பிங்க் பந்துகளுடன் பயிற்சி செய்ய அனுமதி கோரப்பட்டது. அதன்படி இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை இந்திய அணி வீரர்கள் பிங்க் நிற பந்துகளுடன் பயிற்சி செய்ய இந்தூர் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய-பங்களாதேஷ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.