பதிலில் திருப்தி இல்லை: பாண்ட்யா, ராகுல் 2 போட்டிகளில் விளையாட தடை?

பதிலில் திருப்தி இல்லை: பாண்ட்யா, ராகுல் 2 போட்டிகளில் விளையாட தடை?
பதிலில் திருப்தி இல்லை: பாண்ட்யா, ராகுல் 2 போட்டிகளில் விளையாட தடை?

இந்தி பட இயக்குனர் கரண் ஜோஹரின் `காஃபி வித் கரண்’ டிவி. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுலும் ஹர்திக் பாண்ட்யாவும் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினர். பெண்கள் குறித்து பேசும்போது, அவர்கள் ஆபாசமாகக் கருத்து தெரிவித்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. 

இதுபற்றி 24 மணிநேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என அவர்களுக்கு பிசிசிஐ நிர்வாகக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் பேசிய கருத்துகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை'' எனப் பதிவிட்டிருந்தார் பாண்டியா. 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் கூறும்போது,  இந்தச் சம்பவம் குறித்து பதிலளிக்க பாண்டியாவுக்கும் ராகுலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 24 மணி நேரத்தில் அவர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், ’’பாண்டியாவின் விளக்கம் திருப்திகரமானதாக இல்லை. அவர்கள் இருவருக்கும் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்குமாறு பரிந்துரைத்துள்ளேன். நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி, அனுமதித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

டயானா எடுல்ஜி, இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சட்டபிரிவு முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார். அதோடு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு தலைவர் சிகே கண்ணாவின் கருத்தையும் கேட்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடருக்காக, ராகுலும் பாண்ட்யாவும் அங்கு சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com