விஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி!

விஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி!
விஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதியில் குஜராத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி!

விஜய் ஹசாரே கோப்பைக்கான அரையிறுதிப் போட்டிக்கு தமிழகம், சத்தீஷ்கர் அணிகள் முன்னேறியுள்ளன.

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடந்து வருகிறது. நேற்று நடந்த 3-வது காலிறுதி போட்டியில், தமிழ்நாடு- பஞ்சாப் அணிகள் மோதின. 

இந்தப் போட்டி, மழைகாரணமாக 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. அதிகப்பட்சமாக பாபா அபராஜித் 56 ரன்களும் வாஷிங்டன் சுந்தர் 39 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 39 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு போட்டி தொடர்ந்தது. பஞ்சாப் அணிக்கு 195 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் தொடர்ந்ததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

லீக் சுற்றில் 9 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்த தமிழக அணி, அரை இறுதிக்கு முன்னேறியது. பஞ்சாப் அணி, 5 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருந்ததால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

மற்றொரு போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணி, சத்தீஷ்கரை எதிர்கொண்டது. முதலில் ஆடிய சத்தீஷ்கர் 45.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால், 40 ஓவர்களில் 192 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி மும்பை ஆடியது. அந்த அணி, 95 ரன்கள் எடுத்து இருந்த போது மழை தொடர்ந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. லீக்-கில் மும்பையை விட ஒரு போட்டியில் அதிகமாக வெற்றி பெற்ற சத்தீஷ்கர் அணி, அரையிறுதிக்குள் நுழைந்தது. மும்பை அணி வெளியேறியது.

பெங்களூருவில் நாளை நடக்கும் அரையிறுதிப்போட்டிகளில் தமிழ்நாடு- குஜராத் மற்றும் கர்நாடகம்-சத்தீஷ்கர் அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com