
விஜய் ஹசாரே போட்டியில் கே.எல்.ராகுல் அபார சதமடித்தார். மற்றொரு போட்டியில் சிறப்பாக ஆடிய விஜய் சங்கர், 91 ரன்கள் விளாசினார்.
விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் போட்டி இப்போது நடந்து வருகிறது. பெங்களூருவில் நடந்த போட்டியில், கர்நாடகா- கேரளா அணிகள் மோதின. முதலில் ஆடிய கர்நாடக அணி 49.5 ஓவரில் 294 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 122 பந்துகளில் 131 ரன்கள் எடுத்தார். மணிஷ் பாண்டே 50 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய கேரள அணி, 46.4 ஓவர்களில் 234 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் கர்நாடக அணி வெற்றி பெற்றது.
சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறிவரும் கே.எல்.ராகுல் இதில் சதம் அடித்தது பற்றி கூறும்போது, ‘’இந்த மைதானத்தில் சதம் அடிப்பது எளிதானதல்ல. இருந்தும் கஷ்டப்பட்டு ஆடினேன். இந்த ரன்கள் எனக்குத் தேவையான ஒன்று. இதுபோன்ற இன்னிங்ஸ்கள் அதிக நம்பிக்கையை அளிக்கும். முதலில் சிறிது நேரம் நின்ற பின், கடைசி வரை ஆட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி தவறான ஷாட்கள் ஆடுவதை தவிர்த்து நிதானமாக ஆடினேன். சிறந்த ஷாட்களை தேர்ந்தெடுத்து விளையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார்.
மற்றொரு ஆட்டத்தில் தமிழக பீகார் அணிகள் மோதின. இதில் விஜய் சங்கரின் ஆட்டத்தால் தமிழக அணி, வெற்றி பெற்றது. விஜய் சங்கர் 91 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் தமிழக அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான், சர்வீஸ் அணிகளை வென்றிருந்தது தமிழக அணி.