விஹாரி, ரிஷப் பன்ட் அசத்தல்: இந்திய ஏ அணி வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய ஏ அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் போட்டி டிரா ஆன நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டான்டன் நகரில் நடந்து வந்தது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, முதலில் பேட்டிங்கை தொடர்ந்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 302 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும் நதீம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸின் அபாரமான பந்துவீச்சால் 192 ரன்களுக்குள் சுருண்டது. அதிகப்பட்சமாக அங்கித் பாவ்னே 43 ரன்களும் கேப்டன் கருண் நாயர் 42 ரன்களும் எடுத்தனர்.
(ஹனுமா விஹாரி)
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை, 210 ரன்களுக்குள் இந்திய ஏ பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத் தினர். இந்திய ஏ தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும் குர்பானி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அடுத்து ஆடிய இந்திய ஏ அணி, ரிஷப் பன்ட் (67), ஹனுமா விஹாரி (68) ஆகியோரின் ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் கருண் நாயர் 55 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற இந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய ஏ அணி கைப்பற் றியது.