தோனியின் ஆதார் விவரங்களை கசியவிட்ட நிறுவனத்துக்கு 10 ஆண்டுகள் தடை
கிரிக்கெட் வீரர் தோனியின் ஆதார் விவரங்களை வெளியிட்ட தனியார் நிறுவனத்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து இந்திய தனிமனித அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் தோனியின் ஆதார் விவரங்கள் வெளியானதை சுட்டிக்காட்டி, அவரது மனைவி சாக்ஷி மத்திய தகவல் தொடர்புத்துறை மற்றும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாக்ஷியிடம் அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், தோனியின் ஆதார் விவரங்களை வெளியிட்ட விஎல்இ (Village Level Entrepreneur) நிறுவனத்தை 10 ஆண்டுகள் எந்த ஒப்பந்தமும் வழங்கப்படாத கருப்புப் பட்டியலில் வைக்க இந்திய தனிமனித அடையாள ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆதார் அட்டைக்கான பணியின் போது சேகரிக்கப்படும் தனி மனிதர்களின் விவரங்களை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த ஆணையத்தின் தலைமை செயலதிகாரி அஜய்பூஷன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.