ஜூனியர் உலகக் கோப்பை: இந்திய அணி 327 ரன்கள் குவிப்பு!
ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, 328 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் பிருத்வி ஷா 94 ரன்கள் எடுத்தார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன. ‘ஏ’ பிரிவில் கென்யா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே, ‘சி’ பிரிவில் பங்களாதேஷ், கனடா, இங்கிலாந்து, நமிபியா, ‘டி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணிக்கு மும்பையைச் சேர்ந்த பிருத்வி ஷா கேப்டனாக உள்ளார். ராகுல் டிராவிட் பயிற்சியாளர். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது.
கேப்டன் பிருத்வி ஷா 94 ரன்கள் குவித்து, 6 ரன்னில் சதத்தை தவறவிட்டார். மன்ஜோத் கர்லா 86 ரன்களும் சுபம் கில் 54 பந்தில் 63 ரன்களும் குவித்தனர். பின்னர் ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியுள்ளது.