U 19 உலகக் கோப்பை: ’ஜூனியர் கோலி’ அபார சதம், பாக்.கிற்கு 273 ரன் இலக்கு!
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி ஆட்டத்தில், பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 273 ரன்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி போட்டியில் நுழைந்த இந்திய அணி, இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. கிறிஸ்ட் சர்ச்சில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன் படி கேப்டன் பிருத்வி ஷாவும் மன் ஜோத் கல்ராவும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி, முறையே 41, 47 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அடுத்து களமிறங்கிய ’ஜூனியர் விராத் கோலி’ என்று சொல்லப்படும் சுப்மன் கில், அபார சதமடித்தார். 94 பந்துகளில் 102 ரன் குவித்து அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் ஒருவர் அடித்த முதல் சதம் இது. இவரின் சதம் காரணமாக இந்திய அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் முஹமது மூசா 4 விக்கெட்டுகளையும், அர்ஷாத் இக்பால் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆட்டத்தைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, ஆடி வருகிறது.