"எனக்கு கார் ரேஸ் மீது ஆர்வம் வரக் காரணம்.." - ஓப்பனாக சொன்ன அஜித்குமார் | Ajithkumar | Race
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது கார் ரேஸில் தீவிரமாக இயங்கிவருகிறார். தற்போது துபாயில் நடைபெற உள்ள ரேஸுக்கு தயாராகி வருகிறார். சிம்பு, நயன்தாரா, மாதவன், யுவன் என பல சினிமா பிரபலங்களும் நேரில் அவரைச் சந்தித்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் ரேஸ் சம்பந்தமான பேட்டி ஒன்றை அளித்துள்ள அஜித், அதில் தனது ரேஸ் ஆர்வம் எப்படி துவங்கியது என்பது குறித்து பேசி இருக்கிறார்.
Michael Fassbender, Patrick Dempsey போன்ற முன்னணி நடிகர்கள் உங்களுக்கு முன்பே ரேஸில் கலந்து கொண்டிருந்தாலும், இந்திய நடிகர்களில் ரேஸுக்கு வந்த முதல் நடிகர் நீங்கள்தான், எப்படி வந்தது இந்த ஆர்வம்?
"இது 70களில் துவங்கியது. அப்போது எனக்கு 7 அல்லது 8 வயது இருக்கும். என் தந்தையின் நண்பர்களில் சிலர் இந்திய சாம்பியன்ஷிப் ரேஸில் கலந்துகொள்வார்கள். அப்படித்தான் மோட்டார் ஸ்போர்ட்ஸ் எனக்கு அறிமுகமானது. அதிலிருந்து ரேஸ் மீது ஆர்வம் வந்தது. கூடவே விஜய் மல்லையாவின் அணியில் ரேஸ் ஓட்டும் ஒருவரது நிறுவனத்தில்தான் என் தந்தை பணியாற்றினார். விஜய் மல்லையாதான் முதல் இந்திய ஃபார்முலா 1 அணியை உருவாக்கியவர் என உங்களுக்கு தெரிந்தே இருக்கும். எனவே, அவரது prototype ரேஸ் கார்கள் எல்லாம் எங்கள் வீட்டுப் பக்கத்தில்தான் இருக்கும். அதைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். இதற்கான விதை அப்போதே விதைக்கப்பட்டிருக்கலாம்."
நடிகர் Steve McQueen ரேஸில் கலந்துகொள்வதை அவரது சினிமா தொழில் தடுத்தது. உங்களின் நடிப்புத் தொழில் நீங்கள் ரேஸில் பங்கு பெற தடையாக இருந்துள்ளதா?
"50களில் இருந்து 80களின் துவக்கம் வரை விஷயங்கள் வேறு மாதிரியாக இருந்தது. அப்போது ரேஸ் ஓட்டுநர்கள் பலரும் ரேஸின்போது இறந்துபோனார்கள். எனவே, அந்த பயம் எங்கிருந்து வருகிறது என்பதாய் புரிந்துகொள்ள முடிகிறது. அப்போதெல்லாம் கார்களும், ஓடுதளங்களும் அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை. ஆனால், இப்போது எல்லாம் மாறி இருக்கிறது. கார்கள் ஓட்டுநர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி வடிவமைக்கப்படுகிறது. பழைய ஓடுதள வடிவங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறைய பயணித்து முன்னேறி வந்துள்ளது. முன்பிருந்ததைவிட காப்பீட்டு நிறுவனங்களும், காப்பீடுகளை அளிக்க முன்வருகின்றனர். எனவே, இப்போது பல விஷயங்கள் எளிமையாகியுள்ளன. எனவே எனக்கு அப்படியான பிரச்னைகள் இருந்ததில்லை."
எந்த ரேஸ் டிராக்குகளில் ஓட்டுவதை ஆர்வமாக எதிர்நோக்குகிறீர்கள்?
"Portima அற்புதமான சர்க்யூட், Paul Ricarம் சிறப்பானது. இந்தியா பொறுத்தவரை ரேஸ் நேரடி ஒளிபரப்பு செய்யப்படாது. அங்கு VHSல்தான் பதிவு செய்யப்பட்ட ரேஸ் வீடியோக்களை நண்பர்கள் அனுப்புவார்கள். நான் பார்த்து வளர்ந்த சர்க்யூட்களில், இப்போது நான் ரேஸ் ஓட்டுகிறேன் என்பதே எனக்கு கனவு நிஜமானதை போன்றது."
உங்கள் ரசிகர்கள் பலரும் ரேஸ் பார்க்க ஆர்வமாக வருகிறார்கள், இந்த ஆதரவு உங்களுக்கு என்ன மாதிரியான உணர்வை தருகிறது?
"இது மிகப்பெரிய விஷயம். ஒருவர் புதிய விஷயத்தை நோக்கிச் செல்லும்போது நிறைய விமர்சனங்கள் வரும், அவர் செல்லலாமா, கூடாதா? என்ற விவாதங்கள் எழும். நானும் அதைச் சந்தித்திருக்கிறேன், சந்தித்துக் கொண்டும் இருக்கிறேன். ஆனால் ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வந்து பார்ப்பது, நான் சரியான பாதையில்தான் சொல்கிறேன் என்பதை மீண்டும் உறுதிசெய்யும் விஷயமாக இருக்கிறது. மேலும் இதை நான் எனக்காக மட்டும் செய்யவில்லை. எனக்கு இந்த விளையாட்டு பிடிக்கும், என்னால் முடிந்தவரை நான் ரேஸ் ஓட்டுநராக இருக்க விரும்புகிறேன். அதேசமயம், இதுபோன்ற பந்தயங்கள் இந்தியாவுக்கும் வர வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆசியா சீரிஸில் இந்தியாவும் ஒரு பாகமாக வேண்டும் என்பது என் ஆசை. ஒரு தனிமனிதனாக அதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ நான் செய்கிறேன். இந்தியாவிலும் மோட்டார் ஸ்போர்ட்டுக்கான நல்ல எதிர்காலம் உள்ளது, அதை என்னால் உணர முடிகிறது."

