ஆக்ரோஷம், அதிரடி, அசால்ட் அதுதான் கங்குலி !

ஆக்ரோஷம், அதிரடி, அசால்ட் அதுதான் கங்குலி !
ஆக்ரோஷம், அதிரடி, அசால்ட் அதுதான் கங்குலி !

உலக கிரிக்கெட் வரலாற்றில் எத்தனையோ வீரர்கள் வந்து சென்றிருக்கிறார்கள், சாதனைப் படைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே கிரிக்கெட் சாதனையை தாண்டி அவர்களுடைய தனித்துவமான குணாதிசயங்களால் போற்றப்பட்டும் தூற்றப்பட்டும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்தான் வங்கத்துப் புலியான "தாதா" சவுரவ் கங்குலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு ஆக்ரோஷமான கேப்டன் யார் என்றால் அது விராட் கோலி என சொல்லிவிடுவார்கள். ஆனால், கோலிக்கு முன்பே மைதானத்தில் ஆக்ரோஷமும், ஆளுமைத் திறனையும் நிரூபித்தவர் கங்குலி.

ஆம், கங்குலி கேப்டனாக இருந்தபோது ஆஸ்திரேலியா போன்ற ஜாம்பவான் அணிகள் மைதானத்தில் சற்றே பெட்டிப் பாம்பாக அடங்கிதான் போயிருந்தனர். அதனால், "தாதா" என்று ரசிகர்கள் கங்குலியை அழைத்தது நூறு சதவிதம் உண்மையாகவே இருந்தது. கால்பந்து விளையாட்டை அதிகம் நேசிக்கும் மேற்குவங்க மாநிலத்தில் 1972ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார் சவுரவ் கங்குலி. சிறு வயதில் கங்குலிக்கும் கால்பந்து மீது தான் நாட்டம் இருந்தது. பின்னர் தனது அண்ணன் ஸ்நேகாசிஷ் அளித்த பயிற்சியால் கிரிக்கெட்டின் பக்கம் கவனத்தை செலுத்தத் தொடங்கினார் கங்குலி.

ரஞ்சி, துலீப் கோப்பை போன்ற முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்ததால், 1992ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணிக்காக விளையாட தேர்வானார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய கங்குலி, ஆனால் அது அவ்வளவு சரியாக அமையவில்லை. இதன் பின்பு கங்குலி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு 4 ஆண்டுகளானது. 1996 ஆம் ஆண்டு அசாருதீன் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று டெட்ஸ் போட்டிகளில் பங்கேற்றது. அப்போதுதான் அணியில் இடம்பிடித்தார் கங்குலி. ஆம், பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம்.

ஆஃப் சைட் அசுரன் !

கிரிக்கெட் உலகில் ஆஃப் சைட்டில் எத்தனை பீல்டர்களை நிறுத்தி வைத்தாலும், துல்லியமாக பவுண்டரிகளை அடிக்கும் திறந் படைத்தவர் கங்குலி. இதனால் கங்குலியை கிரிக்கெட் உலகம் "ஆஃப் சைட் கிங்" என செல்லமாக அழைத்தனர். அதேபோல சிக்ஸர் விளாசுவதிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் கங்குலி. இறங்கி வந்து அடித்தால், பந்து மைதானாத்திற்கே வெளியே பறக்கும். இதுவே கங்குலி ஷாட்டின் ஸ்பெஷல். இதனால் பல உலக தலைச் சிறந்த ஸ்பின்னர்களான முத்தையா முரளிதரனும், ஷேன் வார்னேவும் கூட பாதிக்கப்பட்டனர்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 முறை ஆட்ட நாயகன் விருது வென்ற பெருமையும் கங்குலிக்கே சேரும். ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 3 சதங்கள் அடித்த முதல் வீரர் போன்ற சாதனைகளையும் அரங்கேற்றியுள்ளார். 1999 உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் விளாசினார். அதிரடி ஆட்டத்தால் மட்டுமன்றி பகுதி நேர பந்துவீச்சாலும் பலமுறை இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறார்.

கேப்டனாக கங்குலி !

சக வீரராக மட்டுமன்றி சாதனைக் கேப்டனாகவும் தன்னை அடையாளப்படுத்தினார். 1999 - 2000 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்ட சூதாட்ட விவகாரம் எழுந்தது. அப்போது அணியின் கேப்டனாக இருந்தார் சச்சின். அப்போது இந்திய அணியின் அஸாருதீன், மோங்கியா, ஜடேஜா, முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. அப்போது இந்திய அணியும் சோபிக்காததால் சச்சின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனையடுத்து கங்குலியை கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. இப்படியொரு இக்கட்டான சூழலில் கேப்டன் பொறுப்பை ஏற்ற கங்குலி இந்திய அணியை கட்டமைத்தார். பின்பு 2003 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.

ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு அதன் சொந்த மண்ணிலேயே சவால் விடும் வகையில் இந்திய அணியை வழிநடத்திச் சென்ற பெருமையும் கங்குலியையே சேரும். வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் , 11ல் வெற்றியை பெற்றுக் கொடுத்து இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர். கிரிக்கெட்டின் மெக்காவாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்ற பிறகு 2002ஆம் ஆண்டு , தனது சட்டையைக் கழற்றி சுற்றியதை யாராலும் மறக்க முடியாது. வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து வீரர் பிளின்டாப் செய்ததற்கு பதிலடியாகவே தானும் சட்டையைக் கழற்றி சுட்டியதாக தாதா பின்னர் விளக்கமளித்தார்.

இந்திய அணிக்கு கிரேக் சாப்பல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதுதான், கங்குலிக்கும் அணிக்கும் மோசமானதாகவே அமைந்ததது. சேப்பலுடன் கருத்து வேறுபாடு கங்குலிக்கு மோசமாகவே அமைந்தது, பெரும் சர்ச்சைகளிலும் சிக்கினார். ஆனாலும் மீண்டு வந்தார் அணியில் சேர்ந்தார் 2008 இல் ஓய்வுப் பெற்றார். ஆனால், கங்குலி இந்திய அணிக்கு செய்யும் பங்கு தொடரவே செய்கிறது. ரசிகர்களை பொறுத்தவரே இப்போதும் அதே ஆக்ரோஷமான கங்குலியை வேறு ஒரு ரூபத்தில் பார்க்க காத்திருக்கிறார்கள், நாமும் காத்திருப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com