இந்திய கூடைப்பந்து சம்மேளன தேர்தல்! விசாரணைக்கு பின் டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

இந்திய கூடைப்பந்து சம்மேளன தேர்தல்! விசாரணைக்கு பின் டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
இந்திய கூடைப்பந்து சம்மேளன தேர்தல்! விசாரணைக்கு பின் டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தேர்தல் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர், துணைத் தலைவர்கள், செயலாளர், இணைச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 11 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 18ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தநிலையில், போட்டியிட்ட ஒருவரது வேட்பு மனுவை தவிர மற்ற அனைவரது வேட்பு மனுக்களையும் பல்வேறு காரணங்களைச் சொல்லி தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்து விட்டதாகவும் தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கூறி தமிழ்நாடு கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுன் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்ததார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்கனவே பதவியில் உள்ள இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவர் கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகிகளுக்கு ஆதரவாக அவர்களுடன் கூட்டுச்சேர்ந்து தான் தேர்தலில் போட்டியிடாவண்ணம் தவறான விண்ணப்பத்தைத் தனக்கு வழங்கியதோடு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தவறானது எனக்கூறி அதனை நிராகரித்துள்ளார். மேலும் சம்மேளன தேர்தலை நடத்தாமல் unopposed என்று கூறி கடந்த 13ஆம் தேதியே இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் மற்றும் இதர நிர்வாகிகள் பெயரை அறிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கவுரவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தஹி, அபிஷேக் சிங்வி ஆகியோர், தேர்தலில் ஒருவர் போட்டியிடக்கூடாது என்பதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரி எதிர்தரப்புடன் கூட்டுச்சேர்ந்து வேட்புமனு விண்ணப்பத்தையே மாற்றிக் கொடுத்துவிட்டு, அதனை நிராகரித்துள்ளார், இது ஒரு மோசடி ஆகும். இது ஒருதலைபட்சமானது, முறைகேடானது. எனவே இந்த தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினர்.

அதனை ஏற்ற நீதிபதி, இந்திய கூடைப்பந்து சம்மேளனத்துக்கு அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் தற்போது பதவியில் இருக்கும் கே.கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 18ஆம் தேதியுடன் முடைவடைவதால், அதன் பின்னர் கூடைப்பந்து தொடர்பாக எந்த நிர்வாக முடிவும் எடுக்கக்கூடாது எனவும் தடை விதித்தார்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க இந்திய கூடைப்பந்து சம்மேளனம், சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாகிகள், மத்திய விளையாட்டு அமைச்சகம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com