விம்பிள்டன் 2025| ”ஃபைனலில் இவர்கள்தான் மோத வேண்டும்..” - வெற்றியாளரை கணித்த கோலி!
2025 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப்போட்டிக்கு செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லஸ் அல்காரஸ் இரண்டு பேருமே தகுதிபெற்றுள்ளனர்.
கடந்த 2023 மற்றும் 2024 விம்பிள்டன் ஒற்றையர் ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியி இரண்டு முறை ஜோகோவிச் மற்றும் அல்காரஸ் மோதிய நிலையில், இரண்டிலுமே ஜோகோவிச்சை தோற்கடித்த அல்காரஸ் 2 பட்டங்களையும் தட்டிச்சென்றார்.
இந்நிலையில் 7 முறை விம்பிள்டன் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் 8வது முறையாக வெல்லவும், 25 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைக்கும் முயற்சியிலும் நோவக் ஜோகோவிச் களம்கண்டுள்ளார்.
இதுவரை ஆண்கள், பெண்கள் என இருதரப்பிலும் 25 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை யாரும் வென்றதில்லை என்பதால், 38 வயதில் ஜோகோவிச் மகுடம் சூடுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விம்பிள்டனை ஜோகோவிச் வெல்ல வேண்டும்..
விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நேரில் பார்க்கச் சென்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, விம்பிள்டன் ஆண்கள் சிங்கிள்ஸ் பட்டத்தை யார் வெல்வார் என்ற கேள்விக்கு ஜோகோவிச் வெல்லவேண்டும் என பதிலளித்தார்.
அப்போது பேசிய விராட் கோலி, “நான் நோவக்குடன் சமீப காலமாக தொடர்பில் இருக்கிறேன் - நாங்கள் சில செய்திகளைப் பரிமாறிக் கொண்டோம். நோவக் மற்றும் கார்லோஸ் இருவரும் இறுதிப் போட்டியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் - ஆனால் இந்தமுறை ஜோகோவிச்சே வெல்லவேண்டும்" என்று கோலி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் கூறினார்.
மேலும், ”எல்லா காலத்திலும் சிறந்த வீரர் யார் என்பதற்கான ஒப்பீடு அல்லது உரையாடலில், அவரை அனைவரிடமும் ஒப்பிடலாம். முதலிடத்தில் இல்லாவிட்டாலும் அதிகபட்ச கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்றவர். அவர் அதற்குத் தகுதியானவர்” என்று கோலி ஜோகோவிச் மீதான அன்பை வெளிப்படுத்தினார்.