தமிழகத்தைச் சேர்ந்த முஹமது நயீம், சவூதி அரேபியா கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் முஹமது நயீம், சவூதி அரேபியாவின் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியில் தேர்வு பெற்றுள்ளார். இவர் தாய்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை முதல் தகுதிச்சுற்றில் விளையாடுகிறார். இதன் மூலம் சவூதி அரேபியா கிரிக்கெட் அணியில் தமிழகத்திலிருந்து பங்குபெறும் முதல் தமிழர் என்ற பெருமையை முஹமது நயீம் பெறுகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகில் உள்ள கோபாலபட்டினம் என்ற கிராமத்தை பூர்வீகமாகக்கொண்டவர் முஹமது நயீம். அவரின் பெற்றோர் தற்போது சவூதிஅரேபியாவில் வசித்து வருகின்றனர். பள்ளிப்படிப்பு முழுவதும் சவூதிஅரேபியாவில் பயின்ற முஹமது தற்சமயம் திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் முதலாம் ஆண்டு தொழில் இளங்கலை படித்துவருகிறார்.
சவூதிஅரேபியா - தாய்லாந்திற்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து முஹமது நயீம் அரேபியா கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முஹமது நயீமின் தந்தை, கிரிக்கெட் போட்டிகளை சவூதி அரேபியாவில் அறிமுகப்படுத்தி அதன் மேம்பாட்டிற்காக உழைக்கும் அமைப்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்போட்டிகளில் விளையாடும் வீரர்கள் வெற்றி பெற்று சவூதி அரேபியாவிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.
சவூதிஅரேபியா, தாய்லாந்து, ஓமன், பூட்டான், கத்தார் நாடுகள் அடங்கிய குரூப் A தாய்லாந்திலும், ஹாங்காங், சீனா, மாலத்தீவு, குவைத், பஹ்ரைன் நாடுகள் அடங்கிய குரூப் B ஹாங்காங்கிலும் விளையாடுகிறது.
இந்த போட்டிகளில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அமீரகம் நாடுகளுக்கு இடையே ஆன போட்டிகளில் பங்குபெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறும்.