"அம்மா நீங்கள் இருந்திருந்தால்" - தமிழக வீரர் முருகன் அஸ்வின் உருக்கமான பதிவு!

"அம்மா நீங்கள் இருந்திருந்தால்" - தமிழக வீரர் முருகன் அஸ்வின் உருக்கமான பதிவு!
"அம்மா நீங்கள் இருந்திருந்தால்" - தமிழக வீரர் முருகன் அஸ்வின் உருக்கமான பதிவு!

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் முருகன் அஸ்வின் தன்னுடைய தாயார் மறைவு குறித்து உருக்கமான கடிதத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் அணி சையத் முஷ்டக் அலி கோப்பை இறுதிப் போட்டியில் பரோடா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தத் தொடரில் முருகன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 8 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்புதான் முருகன் அஸ்வினின் தாயார் புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார். முருகன் அஸ்வினின் தந்தை எழுத்தாளர் இரா.முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சையத் முஷ்டக் அலி கோப்பையை வென்ற நிலையில் தனது தாய் குறித்து உருக்கமான பதிவை முருகன் அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் எழுதியுள்ளார் அதில் "ஒரு மாதத்துக்கு முன்பாக புற்றுநோய் பாதிப்பு காரணமாக என் அம்மா இறந்தார். அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை. துரதிஷ்டவசமாக அவரை நான் இழந்துவிட்டேன். என் அம்மாவுக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும்" என்றார்.

மேலும் "என் அம்மாவின் கிரிக்கெட் ஆர்வம்தான் என்னையும் கிரிக்கெட் விளையாட தூண்டியது. எனக்கு சிறுவயதில் ஏராளமான கிரிக்கெட் பந்து, டென்னிஸ் பந்து, ரப்பர் பந்துகளை அவர் வாங்கிக்கொடுப்பார். அதில் விளையாடியே நான் என் கிரிக்கெட் திறமையை வளர்த்துக்கொண்டேன். அதுதான் கிரிக்கெட் மீது எனக்கு விருப்பம் வர காரணமாகவும் அமைந்தது. எனக்காக அதிக நேரத்தை ஒதுக்கி என்னை பயிற்சிக்கு அவர்தான் அழைத்துச் செல்வார். என் பள்ளியிலிருந்து அனுமதி பெற்று கிரிக்கெட் போட்டிகளுக்கு என்னை அனுப்பி வைப்பார்"

"என் அம்மா காலை 4 மணிக்கு எழுந்து அனைவருக்கும் சமைத்துவிட்டு காலை 7 மணிக்கு அலுவலகம் புறப்படுவார். பின்பு மாலை 7 மணிக்கு வீடு திரும்பி அனைவருக்கும் சமைப்பார். தன்னுடைய வாழ்நாள் முழுவதுமே இதை சலிப்பின்றி செய்தார். அவர்தான் என்னுடைய முதல் ரசிகரும் விமர்சகரும். நான் எப்போதும் சிறப்பாக விளையாட வேண்டும் என்றே விரும்புவார். அம்மா இறந்த அடுத்த சில தினங்களிலேயே சையத் முஷ்டக் அலி கோப்பைக்கு புறப்படவேண்டிய சூழ்நிலை.ஒரு மகனாக 13 நாள் சடங்குகள் செய்ய வேண்டியது இருந்தது"

"அப்போது நான் மிகவும் குழப்பமான சூழ்நிலையில் இருந்தேன். ஆனால் என்னுடைய அப்பா, மனைவி, சகோதரிகள் நான் சையத் முஷ்டக் அலி கோப்பையில் விளையாட வேண்டும் என விரும்பினார்கள். அதைத்தான் என் அம்மாவும் விரும்பியிருப்பார்கள் என கூறி என்னை போட்டிக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த வெற்றி கோப்பை உங்களுக்கானது அம்மா. என் அம்மா இப்போது பெருமையாக இருப்பார். இந்தத் தொடரில் அதிக விக்கெட்டை வீழ்த்திய தமிழக வீரர் நான் என்பதிலும் அவருக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அனைத்துக்கும் நன்றி அம்மா" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் முருகன் அஸ்வின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com