இதனால் தான் விளையாடவில்லை.. புதுவரவு மகிழ்ச்சியில் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி தம்பதி!
2025 ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. மூன்று போட்டிகள் நடந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை ஆர்சிபி அணியும், ராஜஸ்தானை சன்ரைசர்ஸ் அணியையும் வீழ்த்தி வெற்றிபெற்றன.
மூன்றாவது போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்ற நிலையில், 4வது போட்டியானது இன்று லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.
இந்த சூழலில் ஐபிஎல்லில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மோதலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs கேஎல் ராகுல் இடையேயான மோதல் தள்ளிப்போயுள்ளது. காரணம் டெல்லி அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 2025 ஐபிஎல்லின் முதல் போட்டியில் அணியில் பங்கேற்று விளையாடவில்லை.
ஏன் கேஎல் ராகுல் விளையாடவில்லை?
விசாகப்பட்டினத்தில் நடக்கும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல் பந்துவீச்சை தேர்வுசெய்ய, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் செய்துவருகிறது. பிளேயிங் 11 அணி வீரர்கள் பட்டியலில் கேஎல் ராகுலின் பெயர் இடம்பெறவில்லை.
இந்த சூழலில் கேஎல் ராகுல் ஏன் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. கேஎல் ராகுல் தன்னுடைய முதல் குழந்தையை எதிர்நோக்கியுள்ளதால், குழந்தை எப்போது வேண்டுமானாலும் பிறக்கலாம் என்ற சூழலில் குடும்பத்துடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேஎல் ராகுலின் உறவினர் ஒருவர் கூறுகையில், “குழந்தை எப்போது வேண்டுமானாலும் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அவர் தனது மனைவியுடன் இருக்க வீடு திரும்பியுள்ளார். இருப்பினும், அணியின் அடுத்த ஆட்டத்திற்கு அவர் நிச்சயம் இருப்பார்" என்று ராகுலின் குடும்ப நண்பர் ஒருவர் கூறியதாக கிறிக்பஸ் தெரிவித்திருந்தது.
பெண் குழந்தையை வரவேற்ற ராகுல்-அதியா!
இந்த சூழலில் கேஎல் ராகுலின் மனைவி அதியா ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘பெண் குழந்தை பிறந்துள்ளதாக’ பதிவிட்டுள்ளார்.
அந்தப்பதிவில், “ அதியா-ராகுல் பெண் குழந்தையை பெற்றுள்ளோம்” என 23.4.2025 என தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.