கங்குலி - விராட் பிரச்னையின் பின்னணி இதுதானா? மீண்டும் பேசுபொருளாகும் கேப்டன்ஷிப் விவகாரம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி இடையிலான பிரச்னை, இன்னும் சூடு குறையாமல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
கங்குலி, விராட் கோலி
கங்குலி, விராட் கோலிfile image

பெங்களூரு - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலி இடையிலான பிரச்னை இன்னும் சூடு குறையாமல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

Virat kohli
Virat kohliShailendra Bhojak

‘அப்படி இருவருக்கும் இடையே என்னதான் பிரச்னை?’ என இருவரின் ரசிகர்களும் யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில், இருவருக்கும் இடையே நடந்த கடந்த கால நிகழ்வொன்று, தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அப்படி அது என்ன நிகழ்வு? பார்ப்போம்!

ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 20ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.

RCBvDC
RCBvDCShailendra Bhojak

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டெல்லி அணிக்கு இது தொடர்ச்சியாக 5ஆவது தோல்வி. நடப்பு சீசனில் இதுவரை விளையாடியுள்ள அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது டெல்லி அணி.

கங்குலி, விராட் கோலி
RCBvDC | டெல்லிய அடிக்கறவங்க எல்லாம் அடிச்சு ரெண்டு பாயின்ட் எடுத்துக்கலாம்..!

என்றாலும் போட்டி முடிந்த பின்னர்தான் பரபரப்பே ஏற்பட்டது. அதற்கு காரணம், அன்றைய போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி மற்றும் முன்னாள் கேப்டனும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரருமான விராட் கோலி இடையிலான பிரச்னை வெட்டவெளிச்சமாக எல்லோருக்கும் தெரியும்படி அரங்கேறியது. இருவருக்கும் இடையிலான பிரச்னை தொடர்பாக இரண்டு வீடியோக்கள் வைரல் ஆனது.

ஒன்று, ஆட்டம் முடிந்த பின்னர் கைகுலுக்கும் நிகழ்வின்போது நடந்தது.

மற்றொன்று, டக் அவுட்டில் (மைதானத்துக்கு வெளியில் வீரர்கள் அமர்ந்திருக்கும் அறை) அமர்ந்திருந்த கங்குலியை அவ்வழியாக நடந்துசென்ற விராட் கோலி முறைத்துக்கொண்டே சென்றதாக வெளியான வீடியோ.

இதில் போட்டி முடிந்த பிறகு கை குலுக்கலின்போது நடந்த வீடியோதான் இரண்டு நாள்களாக பேசுபொருளாகி வருகிறது. அதன்படி அன்றைய போட்டி முடிந்த பின்னர் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த பெங்களூரு வீரர்கள் வெளியே வந்தனர். அப்போது, டெல்லி அணி வீரர்கள் அவர்களை கைகுலுக்கி வரவேற்றனர். இது இயல்பாக ஒவ்வொரு போட்டியிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான்.

ஆனால் அன்று கூடவே இன்னொன்றும் நடந்தது. அதாவது, பெங்களூரு அணி வரிசையில் இருந்த விராட் கோலியிடம் ரிக்கி பாண்டிங் கைகொடுத்து பேசினார். அப்போது பாண்டிங்கிற்கு அடுத்து சவுரவ் கங்குலி நின்றிருந்தார். பாண்டிங்கை கடந்து சவுரவ் கங்குலி போக, விராட் கோலியும் தலையை சாய்த்துக் கொண்டு கடந்து சென்றுவிட்டார். பரஸ்பரமாக, இருவரும் கைகொடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதை அந்த நிகழ்வு தெளிவாகக் காட்டியது.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பின்னணியில் கடந்த கால நிகழ்வொன்று கூறப்படுகிறது. அது என்ன நிகழ்வு தெரியுமா?

முன்பு விராட் கோலி டி20, ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் கேப்டனாக இருந்தபோது சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தார். அப்போது, விராட் கோலி தானே முன்வந்து டி20 கேப்டன்ஷிப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

விராட் கோலி
விராட் கோலிfile image

அதேநேரம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டனாக தொடர வேண்டும் என்றே அவர் விரும்பினார். இப்படியான நிலையில், டி20 மற்றும் ஒருநாள் ஆகிய போட்டிகளுக்கு ரோகித் சர்மாவே கேப்டனாக இருக்க வேண்டும் என முடிவெடுத்து அதனைச் செயல்படுத்தினார் அப்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி.

இதுகுறித்து கங்குலி, ”விராட் கோலியை டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டாம் என நான் கேட்டுக்கொண்டேன். ஆனாலும் அவர் விலகிவிட்டார். இரு லிமிடெட் கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே கேப்டன் வேண்டும் என நிர்வாகம் நினைத்ததாலேயே, விராட்டை டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டிலிருமிருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது” என தெரிவித்தார். இதில் தன்னை விலக வேண்டாம் என கங்குலி கேட்டுக் கொண்டதாகக் கூறியதை மறுத்தார், விராட் கோலி.

இதற்கு பின்னர் இந்நிகழ்வு பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் இந்த மனக்கசப்பு நீங்கிவிட்டதாக பலரும் கருதினர். ‘ஆனால் அது நீங்கவில்லை, தொடர்கிறது’ என்பதை, இந்த சமீபத்திய நிகழ்வு காட்டியிருப்பதாக தற்போது கூறப்படுகிறது!

கங்குலி
கங்குலிani

இதனிடையே தற்போது டெல்லி ஆர்.சி.பி போட்டியின்போது ஏற்பட்ட சச்சரவுகளுக்கு பின், இன்ஸ்டாகிராமில் சவுரவ் கங்குலியைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார் (Unfollow) விராட் கோலி.

இது, இருவருக்கும் இடையிலான மோதல் மற்றும் முரண்பாட்டை இன்னும் உறுதிசெய்வதாக அவர்களின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com