’7-0 என WIN பண்ணதெல்லாம் வீண்!’ சேப்பாக்கை வீழ்த்தி முதல்முறையாக FINAL-ல் திருப்பூர் தமிழன்ஸ்!
2025 தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL ) டி20 தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
லைக்கா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் முதலிய 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்திய நிலையில், 28 லீக் போட்டிகள் முடிவில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் முதலிய 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.
லீக் போட்டிகள் 7-லும் வெற்றிபெற்று தோல்வியே சந்திக்காமல் பிளேஆஃப் சென்ற அபராஜித் தலைமையிலான சேப்பாக் அணி, குவாலிஃபையர் 1 போட்டியில் திருப்பூர் தமிழன்ஸிடன் தோற்று குவாலிஃபையர் 2 போட்டிக்கு சரிந்துள்ளது.
குவாலிஃபையர் 1-ல் சேப்பாக் கில்லீஸை தோற்கடித்ததன் மூலம் டிஎன்பிஎல் வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி.
சேப்பாக்கிற்கு முதல் தோல்வியை பரிசளித்த திருப்பூர்!
நேற்று நடைபெற்ற பரபரப்பான குவாலிஃபையர் 1 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி, 20 ஓவரில் 202 ரன்கள் குவித்தது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அமித் சாத்விக் மற்றும் சசிதேவ் இருவரும் அரைசதமடித்து அசத்தினர். இதில் சசிதேவ் 26 பந்தில் 57 ரன்கள் குவித்து மிரட்டிவிட்டார்.
203 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம்கண்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் அபரஜித்தை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சோபிக்கவில்லை. 4 சிக்சர்கள் அடித்து அச்சுறுத்திய அபரஜித் 30 ரன்னில வெளியேற, 113 ரன்னுக்கே சுருண்டது சேப்பாக் அணி.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய எசக்கிமுத்து மற்றும் மதிவாணன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்ற 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.
இன்று நடக்கவிருக்கும் எலிமினேட்டர் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி, ஜெயராமன் தலைமையிலான திருச்சி அணியை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது.