‘ஓய்வு குறித்து தோனியின் மனசில் என்ன இருக்குனு...’ - சுனில் கவாஸ்கர் சொன்ன பதில்!

சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் மனதை படிப்பது கடினம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
MS Dhoni
MS Dhoni@ChennaiIPL

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நடப்பு தொடரின் முதல் பிளே ஆஃப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத் அணியும், இரண்டாம் இடம் பிடித்த சென்னை அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடும். அதேநேரத்தில் தோல்வியுறும் அணி, நாளை நடைபெறும் லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் வெள்ளிக்கிழமை மோதும். இதில் வெற்றிபெறும் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். அதனால், இன்று நடக்கும் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடந்துகொண்டு வருகிறது.

CSK Team
CSK TeamR Senthil Kumar, PTI

இந்நிலையில், டாஸ் வென்ற பின்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த உரையாடலின்போது, “தனது ஓய்வு குறித்து நடப்பு சீசன் முழுவதும், தோனி கலவையான அறிகுறிகளையே (சிக்னல்களையே) கொடுத்து வந்தார். அவரின் மனதை படிப்பது கடினமானது. சிறந்த கேப்டன்கள் பொதுவாக அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எதிரணியை யூகித்துக்கொண்டே இருப்பார்கள்” என்று வர்ணனையாளரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசுகையில், “கிரிக்கெட்டை அவர் தொடர வேண்டும் என்றும், விளையாட்டில் மிகவும் உயரத்திற்கு அவர் செல்ல வேண்டும் என்றும் நாம் அனைவரும் விரும்புகிறோம். சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை எப்பொழுதும் மகிழ்விப்பதுபோல், அவர் தனது சக்தியின் உச்சத்தின்போது வெளியேற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com