
ஐ.பி.எல். தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. பின் விளையாடிய கொல்கத்தா அணி, 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும், இந்த சீசனில் சொந்த மண்ணில் அதாவது சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே. அணி விளையாடும் கடைசி ஆட்டம் இதுதான் என்பதால், இந்த போட்டி முடிந்தவுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது சிஎஸ்கே அணி வீரர்கள், ரசிகர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மைதானத்தை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து, கேப்டன் தோனி மற்றும் சக வீரர்கள் இணைந்து மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு டீ-ஷர்ட், பந்து உள்ளிட்ட பொருட்களை வழங்கி தங்களது நன்றியினை வெளிப்படுத்தினர்.
அப்போது, ஒருபுறம் பேட்டி அளித்துக் கொண்டிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தோனி தன் அருகில் வருவதைக் கண்டதும் திடீரென கேமராவை விட்டு விலகி, தோனியிடம் நேராக ஓடினார். அங்கு தோனியிடம் பேனாவை கொடுத்து தன் சட்டையில் ஆட்டோகிராப் போடும்படி கேட்டுக்கொண்டார்.
அவரது வேண்டுகோளுக்கு இணங்க தோனி, சுனில் கவாஸ்கரின் சட்டையில் ஆட்டோகிராப் போட்டார். பின்னர், இருவரும் பரஸ்பர அரவணைப்பைப் பகிர்ந்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் ஒரு சாதாரண ரசிகரைப் போல தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.